Saturday, October 23, 2021

The Mind of Mahatma Gandhi

மகாத்மா காந்தியைப் பற்றிய இந்தச் சிறு நூல் பெரும் சிறப்பு வாய்ந்தது. காந்தியின் காலத்திலேயே வந்த நூல். முழுதும் காந்தியே பார்த்து ஒப்புதல் அளித்தது. காந்தியின் தத்துவங்களைப் பல தலைப்புகளில் தொகுப்பு நூலாகப் பெருந்தொகை ஒன்று தயார் செய்தார்கள். அது கடைசியில் பல சூழ்நிலைகளின் நெருக்கடியில் இந்தத் தேர்ந்தெடுத்த ரத்தினச் சுருக்க வடிவிற்கு வந்துவிட்டது. தேர்வு சும்மா சொல்லக் கூடாது. அருமை. ஒவ்வொரு காந்தி மொழிக்குப் பின்னும் பெரும் விவாதம் அடங்கியிருக்கிறது. பெரும் விசாரம் உள்ளோடித்த்தான் அந்த மொழி வந்திருக்கிறது என்பது நன்கு தெரியும்படியான மொழி முத்துகளாகப் பார்த்துத் தொகுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் நன்கு தேர்ந்தவர்கள் R K Prabhu and U R Rao. வெளிவந்த ஆண்டு மார்ச் 1945. இரண்டாவது பதிப்பு அக்டோபர் 1946. ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிடி பிரஸ், இந்தியா கிளை அன்று இதைக் கொண்டிவந்திருக்கிறது. முன்னுரை சர்வபள்ளி ஸ்ரீராதாகிருஷ்ணன் அவர்கள். Neither Saint nor Sinner, My Mahatmaship, I know the Path, The Gospel of Truth, Truth is God, Prayer, the food of my soul, The Inner Voice, Truth and Beauty, My Inconsistencies என்று இவ்வண்ணமாக 36 தலைப்புகளில் காந்தியின் கருத்துலகத்தை நமக்கு ஸ்படிகப் படுத்துகிறார்கள் தொகுப்பாசிரியர்கள். 
முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைக் கவனப்படுத்துகிறார் சர் ராதாகிருஷ்ணன். திறமையான அரசியல்வாதிக்கும், தீர்க்கதரிசியான அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். 

There are many who dismiss Gandhi as a professional politician who bungles at critical moments. In one sense politics is a profession and the politician is one trained to transact public business in an efficient manner. There is another sense in which politics is a vocation and the politician is one who is conscious of a mission to save his people and inspire them with faith in God and love of humanity. Such a one may fail in the practical business of government but succeed in filling his fellows with an invincible faith in their common cause. (Pp V) 

காந்தி எனக்குப் புரியாத ஒரு புதிர் என்று முன்னம் ஓர் இழையில் எழுதியுள்ளேன். அதை இங்கு மீண்டும் பகிர்கிறேன். 

"அவதாரம் அன்று. கடவுளிடமிருந்து வந்த தூதரும் அன்று. நம்மைப் போல், நம்மைப் போல் என்றால் நம்மைப் போலவேதான், ஒரு மனிதன். அவனுக்கும் பிறந்தவுடன் ஏதோ சங்கேதங்கள் எல்லாம் எந்த சமிக்ஞைகளாலும் தெரிவிக்கப் படவில்லை. அவன் நான் தான்; நீங்கள்தான்; தோ அவர்தான். 

ஆனால் என்ன! திடீரென்று சத்தியம், அஹிம்சை என்ற இரண்டை முரட்டுத்தனமாகப் பற்றிக் கொண்டான். Total Committment இத்தனைக்கும் ராஜ யோகத்தின் படி அஷ்டாங்க யோகாரூடத்தில் முதல் படிக்கட்டு சமம் தமம்.
உள்ளே தோன்றும் புலனிச்சைகளைச் சமனப் படுத்தல்; வெளியில் சென்று பாயாதபடி புலன்களைக் கட்டில் நிறுத்துதல். இந்தப் படிக்கட்டில் சம தமங்களில் சேர்ந்த ஓரிரு நியமங்கள்தாம் சத்தியம், அஹிம்சை. ஆன்மிக உச்சிக்குப் போய்ச்சேர கடைசி நிலை சமாதி நிலைக்குப் போக இன்னும் ஏகப்பட்ட படிக்கட்டு. அதில் அநாயசமாக ஏறி விளையாடிய மகனீயர்கள் எனக்குப் புதிராகத் தெரியவில்லை. ஆனால் மோகன் தாஸ கரம் சந்திர காந்தி எனக்கு இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார். இனியும் அப்படித்தான் இருப்பாரோ அறியேன். எதில் புதிர்? அவரை மகாத்மா என்பதில் புதிரா? அல்லது திரு எம் கே காந்திஎன்பதில் புதிரா? அவரை மகாத்மா என்பதில் எந்தப் புதிரும் எனக்கு எழவில்லை. செயற்கரிய செய்வர் பெரியோர் ஆகலின் அப்பெற்றியர் யாவரே ஆயினும் மகாத்மா என்று சொல்வது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. அதை அவர் மறுத்தார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதை 'அவர்' மறுத்தார் என்னும் பொழுதுதான் என் கவனம் முழுதும் அந்தப் பதத்தின் பால் குழிகிறது. காரணம் வெறுமனே அடக்கமாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றை மறுதலிக்கும் நபர் இல்லை அவர். அப்பொழுது அவர் மறுதலிக்கிறார் என்றால் அந்த மகாத்மா என்ற பதத்திற்கு இருக்கும் உண்மையான பொருள் ஆழம் என்னை அவர் பார்வையில் ஒன்றச் செய்கிறது. 

ஆனால் இந்த மனிதன் தன்னிடம் இருக்கும் 'அந்த நொய்ந்த போக்கினை'த் தாமேதான் ஒளிவு மறைவின்றி ஒரு மருத்துவத் தூய்மையோடு எழுதுகிறார். தாம் அதனோடு போராடுவதாக அவர் கூறும் பொழுது நாம் எதையோ செயித்து விட்டோம் என்ற உணர்வினை அடைகிறோம். ஆம் கள்ளம் கபடம் சூது மறைமுகம் என்ற இருட்டுகளுக்கு ஆடுகளமாக ஆக்கப்பட்ட காமம் என்பது அவருடைய சத்திய சோதனையின் முன் மீண்டும் எரியுண்டு கட்புலனாகி நடுங்குகிறது. ராமனாக வேடம் பூண்டு நீ சீதையிடம் போய்ப் பேசிப் பாரேன் என்று யாரோ ராவணனுக்கு உத்தி கூற அதற்கு ராவணன், "அந்தோ! நான் என்ன செய்வேன்? ராமனாக வேடம் பூண்டால் என் மனத்தை விட்டுக் காம உணர்ச்சி முற்றிலும் மறைந்து விடுகிறதே! உலகத்தை எல்லாம் பிரம்ம பாவமாகக் காணும் பார்வைதான் மிஞ்சுகிறது. எனவே அந்த வேடம் மட்டும் போட மாட்டேன்' என்றானாம். இது உண்மையில் நடந்திருக்கும் என்று எனக்குக் காந்தியைப் படிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது. 

கோட் சூட் போட்டவர் திடீரென்று கதராடை, முழங்கால் வேட்டி, மேலே போர்த்தியபடி ஒரு மேல் துணி என்ற உடையலங்காரத்துக்கு மாறினார். 'பாதி நிர்வாண பக்கிரி' பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அஸ்தியில் புளியைக் கரைத்தார். 
இங்கு முனியன் குடிசையில் ராட்டினம் சுத்தினால் மான்செஸ்டரில் ஆலைகள் நிக்கும் என்று எப்படிக் கண்டுபிடித்தார்? பாதயாத்திரையாய் நடந்து சென்று ஒரு பிடி உப்பை அள்ளினால் அது யுனைடெட் கிங்டம் வாயில் போட்ட வாக்கரிசியாய் ஆகும் என்று எந்த யட்சிணி இவருக்கு வந்து சொல்லியது.? 
ஆள்கட்டு, அடிதடி, கொள்ளை, தகிடுதத்தம், அநியாயம் இவையில்லாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை அறிவாளிகளே ஒரோவழி ஒப்புக்கொண்டு மாக்யவில்லியையும், கௌடின்யரையும் சப்பைக் கட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலத்தில் ஆத்ம பலத்தை மட்டுமே நம்பி, சத்யம், அஹிம்சை ஆகிய இரண்டை மட்டுமே ஆயுதமாகவும், கவசமாகவும் கொண்டு சத்யத்தின் ஆக்ரஹத்தை போர்முறையாய் அறிவிப்பான் ஒருவன் என்றால், அதன்படியே தானும் நடந்து, அதுமட்டுமில்லாது பல்லாயிரக் கணக்கான பிரிவினைகள் உள்ள பல கோடி மக்களையும் 'உஸ்' உஸ்' என்று ஒற்றை விரலை அசைத்தே ஒருமிப்பான் அந்த வழியில் என்றால், எனக்குப் புதிரானவன் என்பதில் என்ன ஐயம்? The riddle of Gandhiji's mind is the riddle of his soul. - என்று தொகுப்பாசிரியர்கள் கூறுவது அருமையான வாசகம். 

மகாத்மா என்ற பட்டம் அவரை மிகவும் படுத்தியிருக்கிறது. 

The only virtue I want to claim is Truth and Non-violence. I lay no claim to superhuman powers. I want none. I wear the same corruptible flesh that the weakest of my fellow-beings wears, and am, therefore, as liable to err as any. My services have many limitations, but God has up to now blessed them in spite of the imperfections. 

கடவுள் மீதும், மனித இயல்பின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன? 

Somehow I am able to draw the noblest in mankind, and that is what enables me to maintain my faith in God and human nature. 

ராமநாமத்தைப் பற்றியும், துளஸிதாஸரைப் பற்றியும் மகாத்மா கூறுவது - 

When a child, my nurse taught me to repeat Ramanama whenever I felt afraid or miserable, and it has been second nature with me with growing knowledge and advancing years. I may even say that the Word is my heart, if not actually on my lips, all the twenty-four hours. It has been my saviour and I am ever stayed on it. In the spiritual literature of the world, the Ramayana of Tulsidas takes a foremost place. It has charms that I miss in the Mahabharata and even in Valmiki's Ramayana. (pp 33) 

பிரார்த்தனை பற்றி - 

Prayer is the key of the morning and the bolt of the evening. 

It is better in prayer to have a heart without words than words without a heart. 

காந்தி என்றால் நினைவுக்கு வருவது உண்ணாவிரதம், சத்தியம் - அஹிம்சை என்ற இரட்டை நன்மைகளுக்கு அடுத்தபடியாக. எப்பொழுது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கலாம் என்பது காந்தியின் எண்ணமா? இல்லை - 

Fasting can only be resorted to against a lover, not to extort rights but to reform him, as when a son fasts for a father who drinks. My fast at Bombay and then at Bardoli was of that character. I fasted to reform those who loved me. But I will not fast to reform say, General Dyer, who not only does not love me, but who regards himself as my enemy. (pp 114) 

சுதந்திரத்திற்காகப் போராடிய காந்திக்கு நோக்கம் சுதந்திரத்தோடு முடிந்து விடவில்லை. - 

My ambition is much higher than independence. Through the deliverance of India, I seek to deliver the so-called weaker races of the earth from the crushing heels of Western exploitation. (pp 169) 

மிக அருமையான தொகுப்பு நூல் என்பது நூல் முழுவதும் தெரிகிறது. 

***

No comments:

Post a Comment