Saturday, October 23, 2021

நளவெண்பா

நளவெண்பா இதற்கு ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார் ஸ்ரீ ஆறுமுகஞ் சேர்வை அவர்கள். மதுரை ஜில்லா செம்பூர் வித்வான். இதற்கு உறுதுணை உதவி மதுரை அமெரிக்கன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர் ஆ கார்மேகக் கோனாரவர்களும், மதுரை ஸௌராஷ்ட்ர ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் பு சிதம்பர புன்னைவனநாதமுதலியாரவர்கள். அச்சிட்டது மதுரை கோபாலகிருஷ்ண கோனாரால் 1929ல். அன்றைய விலை ரூ2ம் எட்டு அணாவும். உண்மையிலேயே என்ன அருமையான உரை! எவ்வளவு விஷயங்கள் மாணக்கர்களுக்குச் சொல்கிறார்கள், தமிழ்க் கல்வி அன்று இருந்த நிலை. 

புகழேந்திப் புலவரின் வெண்பா கேட்கவா வேண்டும்! ஒட்டக்கூத்தருக்கும், புகழேந்திக்கும் நடந்த புலமைச் சண்டைகள், ஒட்டக்கூத்தரின் அடாவடித்தனம் எலலாம் முன்னுரையில் கூறுகின்றார்கள். அதுவே ஒரு தமிழ்க்கல்விதான். அந்தக் கால அரசனுக்கு இரண்டு புலவர்களுக்கிடையில் மூட்டிவிட்டுக் கவிதை வாங்குவது ஒரு பொழுது போக்கு போலும்! 
ஒட்டக்கூத்தரோ புகழழேந்தியைச் சிறையில் போடச் செய்துவிட்டார். ஒரு நாள் பவனி. சிறைச் சாலையின் சன்னலிலிருந்து வேடிக்கை பார்க்கிறார் புகழேந்தி. அரசனோ அவரைக் காட்டி ஒட்டக்கூத்தருக்கு 'ஓ வித்வானே! அதோ நிற்கும் புகழேந்தி புலமையி மிகச் சிறந்தவரல்லவா!' என்றார். உடனே கூத்தர், 

மான் நிற்குமோ, இந்த வாளரி வேங்கை முன்?
வற்றிச் செத்த கான் நிற்குமோ இவ்வெரியும் தழல் முன்?
கனைகடலின் மீன் நிற்குமோ இந்த வெங்கட் சுறவமுன்?
வீசுபனி தான் நிற்குமோ இக்கதிரோன் உதயத்தில்?
தார்மன்னனே! 

என்று பாடினார். அரசனை நோக்கிப் புகழேந்தி, 'மன்னா! இதை நான் வெட்டிப்பாடவா? ஒட்டிப் பாடவா?' என்றார். ஒட்டிப்பாடுக என்றதும், 

மான் அவன்.
நான் அந்த வாளரி
வேங்கையும் வற்றிச் செத்த கான் அவன்.
நான் அவ்வெரியும் தழலும்.
கனைகடலின் மீன் அவன்
நான் அந்த வெக்கட் சுறவமும்
வீசுபனி தான் அவன்
நான் அக்கதிரோன் உதயமும்.
தார்மன்னனே! 

என்று பாடினார் புகழேந்தி. 

***

No comments:

Post a Comment