Saturday, October 23, 2021

ஷட்தர்சன ஸமுச்சயம்

ஹரிபத்ரர் என்னும் ஜைனர் எழுதிய நூல் இது. பௌத்தம், நியாயம், சாங்க்யம், ஜைனம், வைசேஷிகம், மீமாம்சை, லோகாயதம் என்னும் தர்சனங்களைப் பற்றிய அழகான சிறு அறிமுகங்கள் அடங்கிய நூல் இது. 

'ஜினர் என்னும் வீரரை, ஸ்யாத்வாத தேசிகரை, நன்ஞானத்து உறைவிடத்தை வணங்கித் தொழுது அனைத்து தர்சனங்களின் உரைபொருளும் சுருக்கமாக இங்கு உரைக்கப்படும்.' என்னும் பொருள் உள்ள செய்யுளான 

ஸத்தர்சனம் ஜினம் நத்வா வீரம் ஸ்யாத்வாத தேசிகம் |
ஸர்வதர்சன வாச்யோSர்த்த: ஸங்க்ஷேபேண நிகத்யதே || 

என்பதனோடு நூல் ஆரம்பிக்கிறது. இந்தச் சிறு அழகிய நூலைத் திறம்பட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் மிகப்பெரிய தத்துவ இயல் பேராசிரியரான ப்ரொஃபஸர் கே சச்சிதாநந்தமூர்த்தி அவர்கள். மொழிபெயர்ப்பு, கூடவே குறிப்புகள் என்று செப்பமுறச் செய்திருக்கிறார். படித்தவுடன் 'நன்றி' என்ற சொல்லை நம் நாவே உதிர்க்கிறது. 

தத்துவ இயல் வரலாறு என்னும் வகையில் பழங்காலத்தில் உலகில் எங்குமே நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 1500 வருஷங்களுக்கும் மேலாக நம் நாட்டில் பல தர்சனங்கள், தத்துவங்கள், மதங்கள் ஆகியவற்றின் உபதேசங்கள் பற்றிய தொகுப்புகள் அங்கங்கே எழுதப்பட்டுள்ளன. பலதும் மறைந்து எஞ்சியதில் பிரபலம் என்று பார்த்தால் ஹரிபத்ரரின் ஸத்தர்சன சமுச்சயம், சங்கரரின் ஸர்வ சித்தாந்தசார சங்கிரஹம், மாதவரின் ஸர்வ தர்சன சங்கிரஹம் என்பன. ஹரிபத்ரரின் காலம் 500 முதல் 700 வரையில் கூறுகிறார்கள். தர்சனங்கள் எப்படித் தம்முள் வேறுபடுகின்றன என்று ஹரிபத்ரர் கூறும் கருத்து ஆர்வக்கவனத்தை ஈர்க்கிறது. 

தர்சனானி ஷடேவ அத்ர மூல பேத வ்யபேக்ஷயா |
தேவதா தத்வ பேதேந ஞாதவ்யாநி மநீஷிபி: || 

தர்சனங்கள் ஆறே, அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டு பார்க்கும் பொழுது. தேவதை, தத்வம் ஆகிய பேதங்கள் கொண்டு பிரித்தறிதல் அறிஞர் கடன். - என்பது இந்தச் செய்யுளின் பொருள். ஆஸ்திக தர்சனங்கள் ஆறு, நாஸ்திக தர்சனங்கள் ஆறு என்று சநாதன தர்மத்தின் ரீதியாகக் கூறுவர். ஆனால் முதலில் ஆறு தர்சனங்களின் கணக்கு வேறு வேறு வகையாக இருந்திருக்கிறது. ஆனால் எல்லா கணக்கிலும் நியாயம், சாங்கியம், மீமாம்ஸை என்பன இடம் பெறுகின்றன. பௌத்தம், ஜைனம் ஆகிய வழிகளை நாஸ்திகக் கணக்கில் சநாதன தர்மந்தான் சேர்த்து வைக்கிறதே அன்றி ஹரிபத்ரர் என்னும் இந்த மாபெரும் ஜைன ஆசிரியரின் கருத்துப்படி பௌத்தமோ, ஜைனமோ நாஸ்திக மதங்கள் அல்ல என்று தெரிகிறது. இந்தச் செய்யுளை நோக்குக. - 

நையாயிக மதாத் அந்யே பேதம் வைசேஷிகை: ஸஹ, ந மந்யந்தே மதம் தேஷாம் பஞ்சைவாஸ்திக வாதிந: |
ஷட்தர்சன ஸங்க்யா து பூர்யதே தன்மதே கில, லோகாயத மத க்ஷேபாத் கத்யதே தேந தன்மதம் || 

'நியாயம் வேறு வைசேஷிகம் வேறு என்று பிறர் கருதுவதில்லை. அவர்களின் கருத்துப்படி ஆஸ்திக மதங்கள் ஐந்து. அவர்கள் கருத்துப்படி ஆறு தர்சனக் கணக்கு என்பதைப் பூர்த்தி செய்ய லோகாயதம் என்பதை ஒரு தர்சனமாகப் போட்டு வைக்கிறார்கள்.' 

ஹரிபத்ரர் கிட்டத்தட்ட 1400 நூல்கள் ஜைனத்தில் செய்திருப்பதாகச் சொல்லுவர். இல்லை 100 ஏ என்பர் சிலர். இரண்டு ஹரிபத்ரர் உண்டு என்பர் இன்னும் சிலர். 

நூலின் இவரம் - Saddarsana Samuccaya, (A Compendium of Six Philosophies), by Haribhadra, Tr into Eng with notes by Prof K Satchidananda Murthy. Eastern Booklinkers Delhi
pp 120 + x, Second Revised Ed 1986. 

***

No comments:

Post a Comment