Friday, October 22, 2021

சித்தாந்தம் என்று சொன்னால்

 அதாவது வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கின்றன. நம்மைச் சுற்றியும் உலகம் இருக்கிறது. அதையும் புரிந்து கொள்கிறோம். நம்மையும் புரிந்து கொள்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் புரிந்து கொண்டேதான் இருக்கிறோம். புரிந்து கொள்வதின் இந்தத் தொடர்ச்சிதான் வாழ்க்கையில் பயனே ஆகும். நம்மைப் புரிந்து கொள்வதிலும், உலகத்தைப் புரிந்து கொள்வதிலும் பலருடைய எழுத்துகள், ஆய்வுகள், உரையாடல்கள், பலருடைய வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், அவர்களைப் பற்றியதும், கருத்துகளைப் பற்றியதுமான பல்லூடக மொழிதல் எல்லாம் நமக்குப் பல விதத்திலும் உதவியாக இருக்கின்றன.

ஆனால் அவரவர்களும் சில சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்துபவர்களாகவோ, அல்லது சித்தாந்தம் ஒன்றைச் சார்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள் (அப்படி இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாம் சமயத்தில் சிலருடைய கருத்துகளின் அழகிலும், நேர்த்தியிலும், நெறிப்பட்ட கட்டமைப்பிலும் ஈடுபட்டு நம்மை அறிந்தோ அறியாமலோ அவர்களின் சித்தாந்தங்களுக்கும் நம்மை ஈடு கொடுப்பவர்களாக நாமாகவே நம் இச்சையின் படியே ஆகிறோம். அப்படி ஆகும் போதுதான் குழப்பம் வருகிறது. ஒரு சித்தாந்த ரீதியாக உலகைப் பார்க்கும் முயற்சி தேவையற்ற சங்கடம். நாமாகவே வருவித்துக் கொள்வது. ஆனால் எந்தச் சித்தாந்தக்காரர்களும் அவர்களின் உண்மையான எழுத்துகளின் மூலம் வாழ்க்கையின் சில அம்சங்களையும், பிரச்சனைகளையும் நோக்கி நம் கவனத்தைக் குவியச் செய்கிறார்கள். வாழ்க்கையின் சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகளும் அவர்களின் எழுத்து மூலம், குறிப்பிட்ட அளவிற்காகவேனும், காலத்திற்காகவேனும் நமக்குக் கிட்டுகிறது. அது நமக்கு லாபக் கணக்கு. அதோடு நாமும் பிரச்சனை ஆக்கிக் கொள்ள்ளாமல் கடந்து வாழ்க்கையை கவனம் கொண்டு போய் விட வேண்டும். அவர்கள் ஒரு சித்தாந்தவாதியார் இன்னொரு சித்தாந்தவாதியாருக்குக் கடும் எதிர்ப்பாக உரையாடிக் கொண்டே இருக்கலாம். இன்றும். என்றும். அது நமக்குத் தேவையில்லாதது. இவரிடமிருந்து நமக்கு என்ன தெளிவு, அவரிடமிருந்து நமக்கு என்ன தெளிவு என்பது குசலமான (புத்திசாலித்தனமான) அணுகுமுறை. ஏனெனில் அதுதான் நம் வாழ்க்கையை நாம் அக்கறை கொள்கிறோம் என்பதைக் காட்டுவது.
ஆனால் நம்முடன் பழகுவோருக்கு என்றும் ஒரு பிரச்சனை இருக்கும். நம்மை எப்படியாவது ஏதாவது ஒரு கோணத்திற்குள் அடைத்து வைத்து அழகு பார்ப்பது என்பது அவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம் பலியாக ஆகமுடியாது. என்ன மிஞ்சிப் போனால் குழப்பவாதி என்ற பெயர் கிடைக்கும். அதைப் பற்றி நமக்கு என்ன? வாழ்க்கையில் குழப்பம் நீங்குவதுதான் நம் அக்கறை.

அப்படியென்றால், சித்தாந்தவாதிகள் எல்லாம் மனத்தைக் குறுக்கிக் கொண்டு விட்டவர்களா, ஓர் சிந்தனைப் பள்ளி என்று அர்ப்பணிப்புடன் வாழ்க்கை முழுவதும் அதில் ஊன்றியவர்கள் உலகை முழுவதும் பார்க்கத் தவறிவிட்டார்களா என்றால் அப்படியும் சொல்ல முடியாது; அதாவது எல்லா சித்தாந்தவாதிகளையும் அப்படி ஒரு பொதுக் கருத்தில் வகைப்படுத்தி விட முடியாது. ஏனெனில் சில சமயம், சில காலகட்டங்களில் ஏதோ ஒரு சித்தாந்தத்தின் முழுதும் நிறுவப்பட்ட தெளிவாக்கமும், தொடர்ந்த பரப்புரையும் தேவை என்று சில அறிஞர்கள் காலத் தேவை என்று உணரும் போது அவர்கள் அந்த சித்தாந்தத்திற்கென்றே தம்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொள்வதும் உண்டு. அப்படிப் பலரும் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுத்த பல சித்தாந்தங்கள்தாம் நமக்கும் பலவிதங்களிலும் பார்வைகளை வளப்படுத்துகின்றன. அவர்கள் எல்லாமும் நம்மைப் போலவே பல சித்தாந்தங்களைக் கற்று ஓர்மை கொண்டு தமக்கு வேண்டுவன கொண்டு கடந்து போகும் பாணியைக் கையாண்டிருந்தால் இன்று நமக்கும் பல சித்தாந்தங்களின் வளங்கள் இருந்திருக்குமா என்பதும் ஒரு கேள்விதான். மேலும் நாமே கூட ஒரு காலத்தில் எப்பொழுதாவது ஏதோ ஒரு சித்தாந்தத்திற்கு வந்து சேர்ந்து அல்லது மனத்தில் அப்படி ஒரு சித்தாந்தம் உருவாகவும், அதன் முக்கியத்துவம் காலத் தேவையாக வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்று நமக்கே தோன்றிவிடுமானால் நாமும் அந்த சித்தாந்தத்தை ஆழமாகவும் அகலமாகவும் நிறுவி நிலைநிறுத்தும் முனைப்பில்தான் இருப்போம். எனவே இப்படி ஒரு பரிமாணமும் இதற்கு இருக்கிறது. என்னுடைய இயல்பு இதுநாள்வரை இப்படி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மேல் பொதுப்பட மொழிதல் இதில் சொல்வது கடினம். நாம் எதைச் செய்தால் நமக்கு நிறைவான மகிழ்ச்சி, உவகை நிலவுகிறதோ அதைச் செய்துகொண்டு போவது உத்தமம் என்பதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment