Friday, October 22, 2021

கீர்த்தன வடிவில் நூல்கள்

 பெரும் நூல்களைக் கீர்த்தனங்களாகப் பாடி நூலியற்றும் மரபு இருந்திருக்கிறது. ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்றவற்றை கீர்த்தனங்களாக இயற்றியவர் திருவிடைமருதூர் ஸ்ரீஅநந்தபாரதி சுவாமி அவர்கள். ஸ்ரீஅருணாசலக் கவிராயர் அவர்களின் ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை இவ்வகை இலக்கியத்திற்கே உந்து சக்தியாக அமைந்தது எனலாம். இராயபுரம் சுப்பராயர் அவர்களின் திருவிளையாடல் கீர்த்தனம், மஹாவைத்தியநாதய்யர் அவர்களின் தமையனார் இராமஸ்வாமி ஐயர் அவர்கள் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை என்று சிலவற்றைச் சொல்ல முடியும். இதைப் போல் கச்சியப்ப முனிவர் தமிழில் செய்த கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இருநூற்றிநாற்பது கீர்த்தனங்கள், முந்நூறு விருத்தங்கள் ஆகிய அளவில் ஸ்காந்த புராணக் கீர்த்தனை என்று செய்தவர் பெருங்கரை ஸ்ரீகவிகுஞ்சர பாரதி அவர்கள். (பிறந்த ஆண்டு 1810.)

இந்தக் கீர்த்தனை வடிவிலான ஸ்காந்த புராணம் நெடுங்காலம் அச்சு வடிவம் காணவில்லை. ஸ்ரீபாரதி அவர்களின் மருமகன் ஆகிய ஸ்ரீஆத்துமநாத பாகவதரின் உளம் தோய்ந்த கதா பிரசங்கங்களில் கேட்டவர்கள் பாக்கியம் செய்தோர் என்றிருந்த நிலை மாறி ஸ்ரீபாரதி அவர்களின் பேரன் ஆகிய ஸ்ரீகோடீசுவர ஐயர், (சென்னை ஹைகோர்டில் ட்ரேன்ஸ்லேட்டராக இருந்தவர்) 1914 ல் மெட்ராஸ் ஸ்காட்டிஷ் பிரஸ்ஸில் பதிப்பிக்கும் வரை இந்த நிலைமை.
சிவகங்கை, இராமநாதபுரம் என்னும் சம்ஸ்தானங்களின் அதிபதிகளால் மிகவும் கௌரவிக்கப்பட்டவராய் இருந்த ஸ்ரீபாரதி அவர்கள் தர்ம சாஸ்தா மீது பள்ளு ஒன்றும், ஸ்ரீமதுரை மீனாக்ஷியம்மை, திருப்பதி வேங்கடாசலபதி, திருமாலிருஞ்சோலை அழகர் ஆகியோர் மீதும் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். அவர் கடைசியாகப் பாட எடுத்துக் கொண்டது கந்த புராணக் கீர்த்தனை. அதன் பின்னர் முற்றிலும் தெய்வ அனுபவத்திலேயே தோய்ந்து தம் வாழ்நாளைக் கடத்தியிருக்கிறார். மக்களின் வாழ்க்கையில் பக்தியும், தமிழும் எப்படிப் பிணைந்து மலர்ந்திருக்கிறது இசையுடன் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment