Friday, October 22, 2021

ரிக்வேதமும் திருவாய்மொழியும்

 ரிக்வேதத்தில் 7ஆம் மணடலத்தில் ஒரு மந்த்ரம்.

’இமே திவோ அநிமிஷா ப்ருதிவ்யாச் சிகித்வாம்ஸோ அசேதஸம் நயந்தி |
ப்ரவ்ராஜே சிந்நத்யோ காதமஸ்தி பாரம் நோ அஸ்ய விஷ்பிதஸ்ய பர்ஷந் ||’
இதன் பொருள்:
‘விண்ணிலும் மண்ணிலும் உள்ளதனைத்தையும் இமையா விழிகளால் எந்நேரமும் இடையீடின்றி அறியும் தேவர் அறிவிலா மனிசரை அறநெறியில் வழிகாட்டிச் செல்வர். கடக்க வேண்டிய ஆறோ தரைதெரியா கடும் ஆழமாக இருக்கிறது. அதில் ஒரு பாலம் தேவர்க்கே புலப்படும். அவர் அருளால் அக்கரையில் நாம் அடைவிக்கப் படுவோம்.’
(தமிழாக்கம் என்னுடையது)
இதற்கு பாஷ்யம் இடும் சாயணர் பக்திச்சுவை சொட்ட இடும் வரிகள் ஏனோ எவர் கண்ணிலும் படவில்லை!
‘.. த்யுலோகஸ்ய ப்ருதிவ்யாச்ச ஸம்பந்திந: அநிமிஷேண ஸர்வதா ஜாநந்த: அஞ்ஜ்னானம் ப்ராபயந்தி... வ்யாபிதஸ்ய கர்மண; பாரம் பர்ஷந் - ப்ராபயந்தி நயந்தி.’
கர்மம் என்னும் கடல், கர்மம் காரணமாக உண்டாகும் பிறவி என்னும் கடல். அதைக் கடந்து செல்ல வழியறியா மாந்தர்க்கு உற்ற ஒரே புணை கடவுளின் தாள் அல்லவா?
இப்பொழுது கடவுளின் தாள் என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது ஏதோ உலக வழக்கில் காலைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்பதைப் போன்றது அன்று. பின் என்ன? இங்குதான் தெளியாத மறைநிலங்களைத் தெளிவிக்கும் நம்மாழ்வாரின் அருளிச்செயல் உதவுகிறது.
‘துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி
நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்
கண்காண வந்து
துயரங்கள் செய்துதன் தெய்வ நிலை உலகில்
புக உய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யான் ஓர் துன்பம் இலேனே.’
தாம் (திவோ அநிமிஷா ப்ருதிவ்யாச் சிகித்வாம்ஸோ) - விண்ணிலும் மண்ணிலும் உள்ளதனைத்தையும் இடைவிடாது அறியும் வாலறிவராய் இருப்பினும் வழியறியா மனிசர்க்காய் அவர்களில் ஒருவராக வந்து தோன்றும், அவர்கள் கண்காண வந்து தன் தெய்வ நிலையுலகில் புக உய்க்கும் பேரருள் கொண்ட அம்மான், வந்து தோன்றி வழி காட்டும் அவன் பேரருள்தான் அறவாழி அந்தணன் தாள். எனவேதான் பகவானின் நடமாடும் ஆலயம் என்று சொல்லப்படும் சாதுக்களையே பகவத்பாதர்கள் என்றே சொல்வது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment