Thursday, May 2, 2019

பாரதி காட்டும் ஹிந்துமதம்

ஸ்ரீ சி எஸ் சுப்பிரமணிய பாரதி என்னும் மஹாகவி பாரதியார் பலமுகங்களில் தம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். தேசம், மொழி, மனித வாழ்வு, உலக நலன், வாழ்க்கையை மேம்படுத்தும் ஆன்மிகம் என்று பல ஆர்வங்கள் அவருள் கிளர்ந்து எழுவதைப் பார்க்க முடியும். பத்திரிக்கையில் அன்றாடம் எழுதுவதாய் இருந்தாலும், பாடல்கள் புனைவதாய் இருந்தாலும், கவிதைகள் யாப்பதாய் இருந்தாலும், கட்டுரைகள் வரைவதாய் இருந்தாலும், காவியங்கள் இயற்றுவதாய் இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் ஹிந்துமதம் என்ற உலகளாவிய மனித முன்னேற்ற மார்க்கத்தை, காலம் கொன்ற விருந்தை மறந்ததில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், சகோதரி நிவேதிதா என்ற வழியில் அவருடைய ஹிந்துமதப் புரிதலும், அதைத் தழுவிய கருத்தாக்கங்களும் எழுகின்றன. ஹிந்துமதம் என்ற மாபெரும் பரப்பை நன்கு ஓர்ந்து வகைப்படுத்திக் கற்க அவருக்கு இந்த மூவர் வழியில் கிடைக்கும் ஆன்மிக ஆதேசம் பெரும் உதவியாக இ ருக்கிறது. இந்திய தேசம் என்பதற்கான மூல படிவமாக ஹிந்துமதம் என்ற ஆன்மிகப் பண்பாட்டு இயக்கம் திகழ்கிறது என்பதை அவர் பெரும்பாலும் சகோதரி நிவேதிதாவின் பெரும் விளக்கங்கள் கொண்டே உள்வாங்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. காலவரிசைப் படுத்தப்பட்ட அவருடைய நூல் தொகுதிகளில் நமக்குக் கிடைக்கும் தெளிவு இதுவாகும். அவ்வாறு நிவேதிதா என்னும் குருமணி காட்டிய விளக்கம் கொண்டு அவர் ஓர்ந்துகொண்ட ஹிந்துமதத் தெளிவை அவர் தம் மேதைமை துலங்க பல எளிய பாடல்களாக ஆக்கி மக்களுக்கு அளித்திருக்கும் விதம் மிகவும் அருமையான ஒன்று. சில பாடல்களைக் கொண்டு நாம் இந்த அம்சத்தைப் பார்ப்போமேயானால் நம் சிந்தையும் நன்கு துலங்கும்.

மனித வாழ்க்கைக்கு ஹிந்துமதம் தரும் உன்னத வழிகள் யாவை, அவற்றைச் சாரமாக மக்களுக்குத் தருவது யாங்ஙனம் என்று சிந்தித்த பாரதியார் ஓர் அற்புதமான எளிய பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். அது கிளிப்பாட்டு என்பதாகும். அவருடைய எழுத்துச் சேகரங்களில் இருந்த இந்தப் பாட்டு அவர் காலத்திற்குப் பின்னர்தான் நூல்வடிவம் கண்டிருக்கிறது போல் தெரிகிறது. ஆனால் என்றென்றைக்கும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெறும் பாடல் அது. ஹிந்துமதம் என்பதையே இவ்வளவு சுருக்கி உரைத்துவிட முடியுமா என்று என்னை அதிசயிக்க வைப்பது.

மனிதருக்கு வாழ்க்கைக்கு வேண்டியது அடிப்படையாக உணவு, உடை, உறையுள். அதற்கு வேண்டியது செல்வம். அதை ஈட்ட வேண்டியது செயல்கள், தொழில்கள், அதைச் செம்மையாகச் செய்யும் மனப்பக்குவம். செயல்கள் யாரும் செய்யலாம். ஆனால் செயலில் செம்மையும், விழுப்பமும் திருவின் திகழ்ச்சியாகும். திரு என்பது பணம் காசு அன்று. செல்வம், சிறப்பு, விழுப்பம் என்பதன் உள்ளார்ந்த தத்துவம்தான் திரு. அந்தத் திரு என்பதைப் புரிந்துகொண்டால்தான் செயல்களும் தொழிலும் சிறக்கும். எனவே அடிப்படைக் கருத்தையே மிகவும் ஆணித்தரமாக அமைக்கிறார் பாரதி.

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து

இவ்வண்ணம் இயங்குவோர் ஏன் எதற்குக் கவலைப்பட வேண்டும்? வருவது வரட்டும் என்று ஏற்பு மனநிலையில் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டியதுதானே!

வருக வருவதென்றே கிளியே!
மகிழ்வுற்றிருப்போமடீ!

என்ன இது? எப்படி மகிழ்வுற்றிருப்பது? செய்யும் செயல்கள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? யாருக்குத் தெரியும்? சில சமயம் பதறாதா மனம்? இங்குதான் ஒரு மாபெரும் தத்துவத்தைப் பாரதி போதிக்கிறார். செயல் என்றால் அதற்கு வெற்றி நிச்சயம். இது விதியின் நியமம் என்கிறார். எந்தச் செயலுக்கு எந்த வெற்றி என்று உள்ளபடி அறிந்து செயல் புரிவதும், தொழில் இயற்றுவதும் மனிதருக்குத் தாமாகத் தோன்றாது. அதைக் கற்றுத் தெளிய வேண்டும். செயல் என்பதற்கு ஓர் சாத்திரம் இருக்கிறது.

வெற்றி செயலுக்குண்டு
விதியின் நியமமென்று
கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே!
கவலைப்படல் ஆகுமோ?

சரிதான் ஆனாலும் மனத்தில் கல்லாமலே புகுந்த பல பழக்கங்கள், நினைவுகள் எல்லாம் இருந்துகொண்டு துன்ப நினைவுகள், சோர்வு, பயம் என்று மனத்தைப் பாழ்படுத்தியவண்ணம் இருக்கிறதே! உள்ளத்தைக் கலக்கிக் கொண்டே இருந்தால் மகிழ்வுற்று எப்படி இருப்பது? அதற்கு வழி என்ன? இங்கு பாரதி உரைக்கும் வழி நவீன உள இயல் கண்டு போற்றும் வழி. அதாவது வாழ்க்கையின் தன்மை, சூழல், வாழ்க்கையின் இலட்சியம், அதை அடைய முன்னேறும் போது வரும் தடைகள் எல்லாமே கலந்துதான் வாழ்வின் அமைப்பு. இதை நன்கு ஒருவர் புரிந்துகொண்டால் பழைய நினைவுகள், உள்ளத்தின் குமைச்சல்கள் போன்றவற்றால் ஒருவர் துன்பமோ, சோர்வோ, பயமோ அடையமாட்டார். அவ்வாறு இயல்பு என்று அமைதியுடன் புரிந்து கொள்ளும் போது மனித மனத்தில் எழும் உன்னத உணர்வே அன்பு. தன்பால் அன்பு, பிற உயிர்பால் அன்பு, தன்னைச் சேர்ந்தவர்கள் சேராதவர்கள் என்ற வேறுபாடு இன்றி பொதுவாக மனித வாழ்வின் மாந்தர் என்ற கணக்கில் உண்டாகும் அன்பு இதுவே மீதூர்ந்து நிற்பது. இந்த அன்பு வெளிப்பட்ட உள்ளத்தில் துன்ப நினைவுகளும், சோர்வும், பயமும் எல்லாம் அழிந்துவிடும். ஆனால் வெளிப்பட்ட அன்பு என்றும் அழியாது. அந்த அன்பு உள்ளத்துள்தான் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தத்தான் ஒருவர் கற்க வேண்டியிருக்கிறது.

துன்ப நினைவுகளும் சோர்வும்
பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடீ கிளியே!
அன்பிற்கு அழிவில்லை காண்!

இந்த அன்பு உள்ளத்தில் கிளர்ந்தவுடன் சும்மா இருக்கிறதா? அனைத்தையும் ஒப்ப நோக்கி அறியும் பேரறிவையல்லவா உள்ளே தந்து விடுகிறது! வெளியே ஞாயிறு போன்று இந்தப் பேரறிவு அக ஞாயிறாய் அனறோ ஒருவர் உள்ளத்தில் சதாகாலமும் திகழத் தொடங்கிவிடுகிறது! அவ்வண்ணம் ஞாயிறு போன்ற அறிவு திகழும் ஒருவரிடம் இருக்கும் தன்மை என்னவென்று பார்த்தால் அது நடுமைநிலை என்று தெரிகிறது. ஸமத்வம் யோக உச்யதே (ஸமமாகக் கருதும் மனநிலையே யோகம் என்று சொல்லப்படுகிறது) என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை. இந்த அறிவுநெறியைக் கற்க எங்கே போக வேண்டும்? எங்கும் செல்ல வேண்டாம். காலையில் எழுந்து வானில் பார்த்தாலே போதும் இதைக் கற்பிக்கும் ஆசான் ஞாயிறு அன்றோ! வேளை தவறாமல் வந்து உயிர்க்குலம் முழுமையும் ஒளியூட்டி உணர்வூட்டி பேருயிரின்பால் செலுத்தும் ஞாயிறை விட யாரே ஆசிரியர்?

ஞாயிற்றை எண்ணி என்றும்
நடுமைநிலை பயின்று
ஆயிரமாண்டுலகில் கிளியே
அழிவற்று வாழ்வோமடீ!

இருந்தாலும் ஒருவருக்கு தூக்கம், மறதி, உணர்ச்சிகள் என்று பலவகையாலும் இயற்கை மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தால் விரட்டிய துயர் எல்லாம் பதுங்கியிருந்து மீண்டும் அசந்தபோது பாயத்தானே செய்யும்? இல்லை என்கிறார் பாரதி. மனிதருக்குப் பழக்கத்தில் நனவு, கனவு, ஆழ்துயில் என்ற மூன்று நிலைகள் மட்டுமே இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அனைத்துக்கும் அடிப்படையாய் துரிய நிலை ஒன்று எக்கணமும் ஓயாமல் பின்னின்று காத்தவண்ணமாய் இருக்கிறது. அது எந்தத் தீதும் அண்ட விடாத  பெருந்தீ. கசடு அணுகா பெருங்கனல்! அந்தத் துரிய நிலைபால் அந்த தூய பெருங்கனலை, மங்களமே நிறைந்த அலகிலா விரிவை, சுப்பிரமணியனை, நெஞ்சில் நேயம் கொண்டு பணிந்தால் நெருங்கித் துயர் வருமோ?

தூயபெருங்கனலை
சுப்பிரமணியனை
நேயத்துடன் பணிந்தால் கிளியே
நெருங்கித் துயர் வருமோ?

ஆன்மிகத்திற்கு ஓர் அரும் வழியாகவும், ஹிந்துமதச் சாரமாகவும் பாரதி தந்திருக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. பாரதி காட்டும் ஹிந்துமதம் சாரமான ஆன்மிகச் செந்நெறி என்பதை நாம் உணர வேண்டும்.

*
பலவகையிலும் பாரதி சொல்லவருவது மனித வாழ்க்கை புன்மை, பொய், தீது, நலிவுகள் நீங்கி தேவ வாழ்வு எய்தல் வேண்டும். அதற்கு நம்மிடம் வேண்டியது நன்கு அறிவு முதிர்ந்த மனப் பூர்வமான சரணாகதி. சரணாகதி செய்ய வேண்டியது பரம்பொருளிடம். அந்தப் பரம்பொருள் பலவடிவங்கள் பெயர்கள் தாங்கி மனித குலத்தின் பல்வேறு மாந்தருக்கும் அருள் புரியக் காத்திருக்கிறது. இந்தச் செய்தியை மிகத் திண்மையாக உரைப்பதால், விளக்கமாகப் பல்வகையிலும் காட்டி நிற்பதால் ஹிந்துமதம் என்பது மனித குலத்தின் உன்னத ஆன்மிக மார்க்கம்.

இதோ இன்னுமொரு பாடல் -

இந்த உலக வாழ்க்கையில் உழலுங்கால் முதலில் வேண்டியது மனித மனம் திண்மை அழியாமல் நின்று நிதானிக்க வேண்டும். அதற்கு என்ன வழி? இரட்டைகள், இன்ப துன்பங்கள், நல்லது தீது என்று பல அனுபவங்கள் எதிருறும்போது நிதானமாக அவற்றை ஓர்ந்து நன்கு கவனம் கொண்டு இடம் பொருள் ஏவல் பொருந்த ஆள்வது என்பது ஒவ்வொரு மனிதரும் தம்வாழ்வில் கற்க வேண்டிய பாடம். இந்தப் பாடத்தைக் கற்க வேண்டுமானால் ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

தடுமாட்டம் அடையாத மனம் தன் புற வாழ்வை, சமுதாய வாழ்வை, கூட்டு வாழ்வைச் செம்மையாக நடத்த வேண்டியது நிதி. நிதியை ஈட்டும் போது பெருமையைத் தொலைத்துவிடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நல்வழியில் ஈட்டிய நிதியால் பெருமையும் சேர வேண்டும். நிதியும், பெருமையும் இயக்கமில்லாத நன்மைகள். அவற்றை இயக்கிச் சமுதாய்த்திற்கும் தனக்கும் பெருநன்மை, தொடர்நன்மை விளைவிக்க வேண்டுமெனில் அந்த நிதியை அதன் சுழற்சியில் செம்மையுற ஆள வேண்டும். இதற்கு திருவள்ளுவர் ஓர் அருமையான உதாரணம் காட்டுகிறார். அறிவுடையவர், நன்கு அறிவு சான்றவர் ஒருவரிடம் செல்வம் சேர்ந்தது என்றால் அது எதைப் போல்? வீட்டுக் கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் நன்றுதான். ஒரு நிறுவனம் சார்ந்த கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் இன்னும் நன்மை. அதைவிட எல்லாம் சிறந்தது ஊர்ப்பொது கிணற்றில், ஊர்ப்பொது நீர்நிலையில் நீரானது நிரம்பி இருந்தால் எவ்வளவு உயிரினங்கள் வாழும்! ஊர்வன, பறப்பன, திரிவன, நடப்பன என்று அனைத்தும் வாழ்ந்து போகும். ‘ஊருணி நீர்நிறைந்தற்று பேரறிவாளன் திரு’. அதைப்போல் நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

புற வாழ்வை நன்கு செம்மையுற அமைத்துக் கொண்டால் அகவாழ்வு தடையில்லாமல் மலர பெருவாய்ப்பு ஏற்படுகிறது. இங்கும் நமக்கு வேண்டியது கண்ணன் திருவடி. இல்லையென்றால் புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. பின் என்ன நடக்கிறது? வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. ‘சார்! அவருக்கு ஏகப்பட்ட காசுபணம் சேர்ந்தது சார்! பாவம் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் பணம் வந்து கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகால் தெரியாமல் தாறுமாறாக வாழ்வு போய் எல்லாம் கெட்டுப் போய்விட்டது’ - இந்தக் குற்றச் சாட்டை எவ்வளவு சுலபமாகப் பார்க்கிறோம். ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் என்ன நடக்கிறது? கண்ணனுக்கே சரணாகதி செய்த வாழ்க்கையில் என்ன ஏற்படுகிறது? நன்மைக்கான அத்தனை ஊக்கங்களும் முகாம் இடுகின்றன. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது. அமரர் சங்கமே அல்லவா நிரந்தர போர்டு போட்டுக் கொண்டு அங்கு கால்கோள் நாட்டிவிடுகிறது. சிறப்பான திட்டங்கள், அவை செயலாக்கங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் ஆக்க பூர்வமான விளைவுகள், அதனால் பெரும் சமுதாயமே நன்மையின் வழியில் உற்சாகப் பட்டுப் பயணிக்கும் பெரும் மங்களம், ஆன்மிக ஈடுபாடுகள் செழிக்கும் நிரந்தர அமைப்புகள், அவற்றின் தடைப்படா சாதனைகள் - ஆம் அமரர் சங்கமே அங்கு வேலை செய்யும் போது வாழ்க்கையில் தீமை என்பது இல்லாமலே போகிறது. இதைத்தான் ஹிந்துமத சாத்திரங்கள் ‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி. நலமோ தீதோ என்று பார்க்காமல் பாடுவது எப்படிப் புலமையுடன் சேரும்? அத்தகைய நலம் ஒன்றையே விரும்பிப் பாடும் புலவர்களே நீங்கள் அவ்வாறு விரும்பினால் ஒன்று செய்யுங்கள் - நிலமாமகளின் தலைவன் புகழைப் பாடுங்கள். அதாவது விண்ணின் சிறப்பையும், மண்ணின் சிறப்பையும் ஒருக்காலும் பிரிக்காதீர்கள். அப்யுதயம் - இவ்வுலக நன்மை என்பதையும், நிச்ரேயஸம் - ஆன்மிக நன்மை என்பதையும் ஒருக்காலும் துண்டுபடுத்தாதீர்கள். இருபிளவு செய்யாதீர்கள். நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே

அவ்வாறு நீங்கள் பாடுங்கால் ஒன்றை நன்கு கவனியுங்கள். தெய்வ வலிமை இல்லாத காலத்தில் ஒரு சின்ன தீமையும் மனித யத்தனத்தினால் தீர்க்க முயலும் போது போனால்போல் இருந்து பின்னர் ஒரு புதுத்தீமையை உண்டாக்கி ஒரு சங்கிலி எஃபெக்டை ஏற்படுத்தும். வாலு போச்சு கத்திவந்தது டும் டும் என்ற வேடிக்கை வேதனை ஆகும். ஆனால் கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் -

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும். நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி. இது எப்பொழுது நடக்கும்? எப்பொழுது இதை நாம் பார்ப்போம்? என்று கேட்டால் பார்க்க விழையும் பக்தர்களின் தவம்தான் இதன் கணக்கு.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே

எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே!

அடடா! இதுதான் குழப்பமா? தவறாமல் ஒன்றை உணர்வீர்களாக இந்தப் புவியில் உள்ள மக்களே! திருமாலாய் இருக்கட்டும், சிவனாய் இருக்கட்டும் அல்லது வானோர் எவராக இருக்கட்டும். அவர்கள் அனைவரும் ஒன்றே. ஒன்றே ஆன பரம்பொருள் பலவாய் நின்று ஒரே சக்திதான் பல உருவங்களில் அருள் புரிந்து திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நன்கு மனத்தில் நீங்கள் ஓர்ந்துகொண்டால் ஒளி ஒரு நாளும் நம்மிடை குன்றாது.

தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே

ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றும் திகழும்
குன்றா ஒளியே

பாரதியாரின் ஆன்மிகம், ஹிந்துமத போதம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்னும் பேரொளி விளக்கத்தில் வேர்கொண்டு எழுவது என்பதை உணரலாம்.

No comments:

Post a Comment