Thursday, May 2, 2019

கண்ணில்பட்ட சில நல்ல நூல்கள்

பாரத வர்ஷே, பரத கண்டே இந்தியா என்றதும் ஆன்மிகம் தான் நினைவில் எழும். விஞ்ஞானம் என்றவுடன் மேலை நாடுகள், கிரேக்கம், ரோம் இவைதான் தோன்றும். ஆன்மிகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்தது நமது பாரதம் என்பது சிறப்புதான். அதில் நமக்குப் பெருமையே. ஆனால் விஞ்ஞானத்தில் எதுவும் சிந்தித்து இயற்றாமலா இருந்தார்கள் நமது முன்னோர்கள்.? அதாவது நாம் எதை ஊன்றிக் கவனிக்கிறோமோ அதுதான் கண்ணில் படும்; நினைவில் நிற்கும். அதனால் அதுமட்டும்தான் இருந்தது என்று சொல்ல முடியாது அன்றோ! விஞ்ஞானம் என்று பார்க்கப் போனால் நமது முன்னோர்கள் சாதித்திருப்பது மிகவும் பிரமிப்பாய் இருக்கிறது. ஒன்றுமில்லை பிரபஞ்சத்திற்கே 'அண்டம்' என்று பெயர் வைத்தார்களே! அதுவே என்ன தெளிவு! 

அண்டம் என்றால் elliptical spherical. பிரபஞ்சம் இவ்வாறு வடிவம் என்பதை எப்படிச் சொன்னார்கள்! வேறு ஒரு வார்த்தை கோளம். spherical. மேற்கில் பூமி உருண்டை என்று சொல்வதற்கே அவ்வளவு முக்கல் முனகல். அதிகாரம் கலை, விவரணை, விஞ்ஞான ஆவணப் பதிவு எல்லாவற்றையும் பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் சுதந்திர இந்தியாவில் 1950ல் Symposium on the History of Sciences in South-East Asia டெல்லியில் நடந்தது. UNESCO வும், The Indian National Science Academy யும் சேர்ந்து நடத்திய அதிலிருந்து தொடர்ந்த ஊக்கமாய் பல விதத்தில் வளர்ந்தது இப்பொழுது என் கண்ணில் பட்ட ஒரு நூலில் தெரிகிறது. மிக முக்கியமான நூல். அதுவும் த ம அ என்றாவது தனக்கென்று அத்யாவசியமான குறிப்புதவி நூல்களுக்கான நூலகம் ஒன்றைப் பேணுகின்ற நிலை வரும் போது இந்த நூல் கட்டாயம் அந்த நூல்கத்தில் இருக்க வேண்டும். 

A Concise History of Science in India Second Edition (D M Bose, Chief Editor; S N Sen, editor; B V Subbarayappa, editor) Indian National Science Academy Universities Press (India) Private Limited
3-6-747/1/A, & 3-6-754/1, Himayatnagar, Hyderabad 500029 A P 
Second Edition 2009
ISBN 978 81 7371 619 5 (PB)
ISBN 978 81 7371 618 8 (HB) 

விலை கண்ணில் படவில்லை. ஆனால் சுமார் 1500 ரூ இருக்கும் என்று நினைக்கிறேன். பக்கங்கள் xxviii + 944 

செய்யித் அல் அந்தலூஷி (11 ஆம் நூற்றாண்டு AD) Sa'id al Andalusi என்ற அராபிய வான இயல் வல்லுநரும், விஞ்ஞான இயலின் வரலாறு எழுதியவரும் ஆனவர் தமது 'கிதாப் தபகாத் அல் உமாம்' (பொருள் வகைப்பாடுகளும், தேசங்களும் பற்றிய நூல்) என்பதில் கூறுவது: 

'The civilizations which were interested in the sciences include eight groups: the Indians, the Persians, the Chaldeans, the Hebrews, the Greeks, the Romans, the Egyptians and the Arabs.... 

The first nation (which cultivated the sciences) is that of the Indians. The nation itself is extremely important, diverse, and is made of powerful kingdoms. It is known for its wisdom; and all people and all generations gone by testify that it was distinguished in the various branches of knowledge... 

The Indian Civilization, among all nations, through the centuries and since antiquity, was the source of wisdom, justice and moderation. They were people of stabilizing virtues, creators of sublime thought, universal fables, rare inventions and remarkable flashes of wit.' 

இந்த மேற்கோளைத் தாங்கித்தான் இந்தத் தொகுப்பு நூலே திறக்கிறது, பொருத்தமாக. விஞ்ஞானத்தின் எந்தத் துறையையும் இந்த நூலில் விட்டுவைக்கவில்லை என்று தெரிகிறது. விஞ்ஞானம் மட்டுமின்றித் தொழில் நுட்பம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் தெரியும் பொருள்பட்டியைப் பார்ப்போமே -- 

1)A Survey of Source Materials -- S N Sen 
2) Astronomy -- S N Sen
Addendum -- B V Subbarayappa 
3) Mathematics -- S N Sen
Addendum -- B V Subbarayappa 
4)Medicine -- R C Majumdar
Addendum -- B V Subbarayappa 
5) Chemical Practices and Alchemy -- B V Subbarayappa
Addendum -- B V Subbarayappa 
6)Agriculture -- S P Raychaudhuri
Addendum -- B V Subbarayappa 
7) Botany -- Prehistoric Period -- K A Chowdhury
The Vedic and Post-Vedic Period -- A K Ghosh
Botany in the Medieval Period from Arabic and Persian Sources --
K A Chowdhury
European Interest in Botanical Studies in India from Medieval Times --
A K Ghosh Addendum -- B V Subbarayappa 
8)Zoology -- J L Bhaduri, K K Tiwari, Biswamoy Biswas
Addendum -- B V Subbarayappa 
9)The Physical World: Views and Concepts -- B V Subbarayappa
Addendum -- B V Subbarayappa 
10)Western Science in India up to Independence -- B V Subbarayappa
Addendum -- B V Subbarayappa 
11) Resume -- B V Subbarayappa 

இதனோடு Abbreviations, Glossary, Bibliography, Supplementary Bibliography, Index என்று நூல் முழுமை பெறுகிறது. நூற்றுக்கணக்கான கோட்டுப் படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் என்று நிறைவான நூல். 1971ல் வந்த முதல் எடிஷனில் தொகுப்பாசிரியர்கள் இவ்வாறு சொல்லி ஆரம்பிக்கின்றனர். 

"There is a world-wide interest in the study of the history of science today as one important aspect in understanding man's cultural patterns. This book attempts to present a concise account of the development of science in one of the most ancient culture-areas of the world. Despite vicissitudes in cultural and scientific endeavours and periods of stagnation, e.g., about the time of the Renaissance in Europe, the Indian subcontinent is one of the few areas where a fairly continuous tradition in science and technology is clearly seen." 

1971க்குப் பிறகு பாலத்தின் அடியில் ஏகபட்ட தண்ணீர் போயிருக்குமே! இரண்டாவது எடிஷனில் பின் வந்த அறிவுப் பெருக்கம், தகவல் சேகரம் ஆகியவைகளைப் பதிவு செய்கிறார் பி வி சுப்பராயப்பா ஆடெண்டம் என்ற பகுதியில், ஒவ்வொரு தலைப்பிலும். நல்ல நூல்; நல்ல கண் திறப்பு. பாரதியின் பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால் இந்த நூல் -- 

"நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறு நுண்மை கொள்ளவிங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை ஒன்று
இறைஞ்சி நிற்பள் வாழ்கவே! 

இதந்த ருந் தொழில்கள் செய்
திரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரியவாய
பன்மதங்கள் காட்டினள்" 



அடுத்து ஒரு நல்ல நூல். சமீப காலமாக நாம் ஒரு பேச்சைக் கேட்கிறோம். சார்! எய்ன்ஸ்டீன் சொன்னத்துக்கு அப்புறம் விஞ்ஞான உலகமே இப்ப கடவுள், மதம் என்பதையெல்லாம் அவ்வளவா எதிர்க்கிறதில்லை. குவாண்டம் தியரி என்ன சொல்றதுங்கறீங்க. எல்லாம் நம்ம பழைய காலத்துப் பெரியவா சொன்னதைத்தான் சார் இப்ப விஞ்ஞானம் சொல்றது. சங்கரர் என்ன சொன்னார்? எல்லாம் மாயான்னார். இதே பேச்சுதான் கொஞ்சம் மாறி மேலை நாட்டிலும். உண்மை என்ன? அப்படியா? குவாண்டம் தியரி, தற்கால விஞ்ஞானம் பழைய மதங்களுக்கு மறைமுகச் சான்று வழங்குகிறதா? இதை ஹிந்துமதத்தின் கோணத்தில் நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்க்கலாம். 
ஆனால் ஒருவர் செமித்திய மதங்கள் சொல்லும் கடவுள் என்பவருக்கு தற்கால குவாண்டம் விஞ்ஞானம் ஏதேனும் ஒப்புதலோ, சான்றோ அளிக்கிறதா என்று ஒருவர் அலசிப் பார்க்கிறார் ஒரு நூலில். 

Quantum Gods Victor J Stenger Prometheus Books 

ஆசிரியர் ஸ்டெங்கர் அளிக்கும் உள்தலைப்பு சற்று விளக்கமானது. 

Creation, Chaos, and the Search for Cosmic Consciousness 

என்னும் உள் குறிப்பு பல விஷயங்களைச் சொல்வதாக வாசகனை ஈர்க்க வல்லது. தனது முந்தைய புத்தகமான God: The Failed Hypothesis (How Science Shows That God Does not Exist) என்பதில் சாதாரண கோடானுகோடி பொதுமக்கள் கருத்துப்படியான செமித்திய மதங்களின் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று அல்சினார். அதிலும் பொதுமக்கள் கருத்து ரீதியான கடவுளைத்தான். ஏனெனில் செமித்திய மதங்களிலும் இறையியல் கற்றோரின் கருத்துப்படி கடவுள் என்னும் கருத்து பெரும் ஆழமும், வாதங்களும் கொண்டது. இந்த நூலில் அடிப்படையான அளவுகோல் கருத்து க்வாண்டம் இயற்பியல் சிந்தனையாகும். ஆசிரியரின் சொற்படியே இந்த நூலில் இரண்டு கருதுகோள்களை ஆசிரியர் முன் வைக்கிறார். 

ஒன்று -- Quantum Spirituality 

இதில் ஆசிரியர் கூறுவது என்னவெனில் க்வாண்டம் மெக்கானிக்ஸ் என்பது மனித மனத்திற்கும், அண்டத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று காட்டிவிட்டது என்பதை மையமிட்டுச் செய்யும் அலசல். 

இரண்டாவது -- Quantum Theology 

இதில் ஆசிரியர் முன் வைக்கும் கருதுகோள் 'quantum mechanics and chaos theory provide a place for God to act in the world without violating his own natural laws. 

அதாவது கடவுள் என்று ஒருவர் மிராகிள்ஸ் செய்பவர்; இயற்கையால் அவர் கட்டுப்படுவதில்லை என்னும் பழைய பொதுமக்கள் கருத்து இல்லாமல், தான் உண்டாக்கிய இயற்கைக்கு முற்றிலும் உடன்பட்டு இயங்கும் கடவுள் -- அப்படி ஒரு கடவுள் இருப்பது யாராலும் எந்த விதத்திலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் இருக்கும். 

இந்த க்வாண்டம் ஸ்பிரிசுவாலிடி என்பதையும், க்வாண்டம் தியாலஜி என்பதையும் ஆசிரியர் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது தகுந்த ஆதாரம் இல்லை என்று நம்மையே கைகளை எடுத்துக் கொள்ள வைக்கிறாரா என்பது ஆசிரியரின் அலசலில் நமது படிப்பைச் சுவையுடையதாக ஆக்கும் அம்சம். 
அடுத்து ஒரு முக்கியமான கருத்தை இந்த நூலில் தொடுகிறார் ஆசிரியர். அதுவே Emergence என்ற கருத்து. தொடக்க நிலையிலிருந்து கடை நிலை வரையிலான காரணகாரிய வாதம் என்பது ஒன்று. கடை நிலையின் விளைவிலிருந்து தொடக்க நிலையில் விளையும் மாற்றம் என்னும் ஒரு வித உல்டா காரண காரிய வாதம். முன்னது bottom-up casuality பின்னது Top-down casuality 

அதாவது உள்ளதாம் நிலைக்கு இனிமேல் வரப்போகும் எதிர்கால நிலைகள் தாம் எழுவதற்கு ஏற்றாற்போல் ஆரம்பநிலைகளிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்னும் பின் நோக்கு காரணவாதம் என்பதைத் தன் அம்சமாகக் கொண்டு அமைந்த கருத்து Emergence என்பது. சாதாரணமாக நாம் பேசும் பொழுது கூறும் இயற்கையைப் பற்றிய கவனிப்பை எடுத்துக் கொள்வோம். விடியப் போறதுன்னா அதற்கு முன்னாடி நன்றாக கருக்கும். 
இது அதற்கு உதாரணம் அன்று. ஆயினும் எப்படி பிற்றைய நிலை தான் எழுவதற்கு வசதியாக முன்னமேயே ஆரம்ப முன் நிலைகளில் அதற்கான காரண சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது என்பது தான் எமர்ஜன்ஸ் கொள்கையின் சாராம்சம். மேலும் ஓர் அருமையான கருத்து ஆசிரியரின் எழுத்து வண்ணத்தில் முன் வைக்கப்படுவது -- இயற்பியல் விதிகள் புற உலகில் பொருட்களைக் கட்டுப் படுத்தும் விதிகளா அன்றேல் அந்தப் பொருட்களை நாம் கற்பதை எல்லை வகுக்கும் விதிகளா என்பதே ஆழ்ந்த ஆய்வில் யோசிக்க வேண்டிய விஷயம் என்று ஆசிரியர் கூறுவது படித்து சிந்திக்கத் தக்கது. 

என் தந்தையார் கூறும் ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது -- குடிகாரனை போலீஸ் பிடித்துக் 'கட்றா வேஷ்டியை!' என்று சத்தம் போட்டால், 'தொரை! நீ சொன்னா செஞ்சுபிட வேண்டியதுதான்' என்று உளறியவாறே வேஷ்டியை எடுத்து போலீஸ்காரருக்குக் கட்டிவிடுவானாம் குடிகாரன். அது போல் இயற்பியல் விதிகள் என்பன பொருள்களுக்கா அல்லது நம் பார்வைகளுக்கா? ஆரம்பத்தில் குழப்பமே இருந்தது; இன்மையாம் ஒன்றே இயன்றது. அதிலிருந்து விதிகள், அலைகள், நிகழ்வுகள் எழுந்தன. எல்லாம் இயல்பாகவே இருந்தன. எழுந்தன. எனவே ஆண்டவன் முடிவு என்று எந்தக் குறுக்கீடும் இந்தத் தொடர்ச்சியில் தேவையாய் இருக்கவில்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருப்பது இயல்பு என்பதால் எல்லாம் எழுந்தது என்று முடிக்கிறார் நூலை. மாறுபட்டு சிந்திக்கவும், உடன்பட்டு விவாதிக்கவும் நல்லதொரு நூல். 

*** 


No comments:

Post a Comment