Thursday, May 2, 2019

விளையாட்டாகச் சில செய்யுட்கள்

குழுமங்களில் சமயத்தில் யாப்பில் ஆர்வம் உள்ள சிலர் சேர்ந்து பாட்டுக்குப் பாட்டு என்ற பாணியில் குறளோ, வெண்பாவோ எழுதுவது மிக இனிய பொழுதுபோக்கு. பண்புடன் போன்ற குழுமங்களில் அவ்வாறு எழுதும் இழைகளில் கலந்து கொண்டபோது எழுதியவற்றில் தேர்ந்தெடுத்தவை இவை. சில பாக்கள் கருத்தாழம் கொண்டிருக்கும்.

*** 

பூதம் புறத்திலுள சூட்சுமமாய் உள்ளநிலை 
மேதக்க தன்மாத் திரை 

தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் கவிதை பெண் 
தன்னை மறந்து எழுதிக்கொள்ளும் கவிதை ஆண் 

அறிவித்தோ வந்ததிப் பாழும் பசியே 
குறிவைத்தே நம்வயிற்றில் குடியாய் -- மறித்திங்கு 
மற்றைநாள் தான்திரும்பும் முழுங்கி யதைமறக்கும் 
எற்றுக்கோ என்றும் புசி. 

தமிழ்பார்த்த நெஞ்சம் தரணியில் நீளும் 
அமிழ்தமென் றேயதைக் கூறு. 

செய்ய வளமிகவே சீரார் அறிவியலும் 
உய்வகை யாமோ உணர். 
மொழிக்கும் அகப்படா துள்ளத்தில் நிற்றல் 
விழிக்குமக் காதல் இயல். 

வாழும் வகையறியேன் வாழ்த்துமுளத் தாலும்மை 
ஆழ்ந்து நினைப்பேன் இனி. 

தலைசான்ற உள்ளத்தால் தள்ளற் கரிதே 
அலைபோன்று மோதும் அருள். 

உணர்ந்தாலும் என்னினி உள்ளத்தைக் கள்ளம் 
தணந்தாரைச் சொல்லல் கடன். 

பாழ்த்த விதியும் பெருத்த வினையுமிவ் 
வாழ்க்கைக் கடல்காற் றனல். 
பொறுத்தாலும் பூமி பொறைதான் கடந்து 
ஒறுத்தாலும் உள்ளவுயி ரொன்று. 

உண்டென்ற உள்ளத்தில் இத்துடன் சென்றிட்டு 
கண்டுகொள நாளை தரும். 

இணைந்தகை பார்த்திவ் விணையத்தில் ஏறும் 
அணையா விளக்கென் குறள். 

பாட்டில் இருளோ பகர்ந்த விருள்தானோ 
கேட்டவிருள் ஏதறி யோம். 

சுகங்கண்ட தில்லை நடனார் கருவுள் 
அகங்கண்ட தில்லை உரு. 

பிரித்துப் பொருள்கண்ட பாவைப் பிரிவின் 
பொருள்கண்ட துண்டோ புகல். 

புகன்றவை கோடிப் புகலாத கோடி 
உகந்த அதுவே உளம். 
குணங்கண்டு தள்ளி குறைகொண் டுகக்கும் 
அணங்காடும் ஆர்க்கும் உலகு. 

*** 


No comments:

Post a Comment