Saturday, May 4, 2019

ஸ்ரீராமகிருஷ்ணரும் கவிதையும்

’அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’ என்ற தொடருக்குப் பின் எனக்கே பல சிந்தனைகள். நண்பர்களின் வாதங்கள். எனவே இந்தக் கட்டுரையை அந்தத் தொடருக்கான பிற்றைநிலை சிந்தனைகளின் பதிவாய் எழுத எண்ணினேன். நுண்ணியல் கருத்துகள் சார்ந்த விஷயத்தில் எப்பொழுதுமே ஒருவன் அறுதியான எழுத்தை எழுதிவிட முடியுமா தெரியவில்லை. தெரிந்துதான் எழுதுகிறோம். தீர்மானம் வந்த பின்னர்தான் எழுதவே துணிகிறோம். ஆயினும் எழுதி முடித்தபின் நன்கு தெரிந்த விஷயங்களிலேயே கதவுகள் திறக்கின்றன. முன் எழுதியவைகள் வெளியிலும் போகாமல், உள்ளேயும் போகாமல் ஆசார வாசலிலேயே நின்று தியங்குகின்றன. இந்த delicate balance ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. எழுதுபவன்தான் முதலில் கற்கிறான் என்ற அக அடக்கத்தை எழுபவனுக்கு உணர்த்தும் குமிண் சிரிப்புதான் இந்தத் தியக்கம் எனில் இது நன்றே.

சில கேள்விகள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் படிக்கும் பொழுது, படித்த பின்னர், படித்த நினைவில் எழுவன. ஏதோ கிராமத்தில் வங்காளத்தில் பிறந்தார். அவருக்கு அவ்வளவாகக் கல்வியறிவு கிடையாது. பள்ளிக்கூடம், உத்யோகம், குடும்பம் என்ற கவலைகள் இன்றி ‘கடவுள்’ என்ற ஒன்றிற்கே காதலாகித் தன்னையிழந்து அதிலேயே ஒன்றிய மனத்தராய் வாழ்ந்தார்.-- இது ஏன் எனக்குச் சங்கடமாக இருக்க வேண்டும். அவர் சொன்னது ஏதோ கற்பனையாக ஏன் இருந்துவிடக்கூடாது? கடவுளாவது ஒன்றாவது? எந்த யுகத்தில் இருந்துகொண்டு எதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.? வங்காளத்தைச் சேர்ந்த ஏதோ கிராமத்துப் பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ தோன்றியதைச் சொல்லிவைக்கப் பின் வந்தோர் அதைப் பற்றிச் சொல்லிச் சொல்லி, என் குழந்தைபருவம் தொட்டே எந்தையார் காரணமாக எனக்குப் படிந்து, ஏதோ தன்னைப்போல் உண்மை போன்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் --இப்படி நினைப்பது எவ்வளவு சௌகரியமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்! சுகம் !

ஆனால் இந்தச் சுகத்திற்கும், எந்த மெய்மையை நோக்கி நாம் பயணிக்கிறோமோ, அந்த மெய்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? சிறு வயதில் நாம் கட்ட கடைசியான சாதனை என்றும், முழுதிருப்தி தரும் அறுதியான பேறு என்றும் நினைத்தவையே ஒரு சில ஆண்டுகளில் வாழ்வின் நிலைப் பாட்டின் வளர்ச்சி மாற்றங்களில் முற்றிலும் அர்த்தம் இழந்து, கடந்த கால பட்டாம் பூச்சிகளாய் நினைவில் பரந்து மறதியில் சென்று மறையவே காண்கிறோம். என்றால் அறிவு, அறிபடுபொருள், அறிவோன் என்ற திரிபுடியின் அனைத்துச் சாத்தியங்களையும் தீர்த்துவிட்டோம் என எவ்வாறு கூற இயலும்? ஸ்ரீராமகிருஷ்ணரை முற்றிலுமாக நம்பிக்கையின் அணியில் வைத்துவிட்டு, விவேகாநந்தரை அறிவின் முனைப்பில் வைத்துப் பார்க்கும் வாய்ப்பாடு சௌகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் அஃது உண்மையா? அல்லது நியாயமா? என்ற கேள்வியை மீள்வாசித்தலின் சில கணங்கள் ஏற்படுத்தாமல் இல்லை.

சரி அப்படி என்றால், அறிவுக்கும் மேற்பட்ட, அறிய இயலாத பல மெய்மைத் தளங்கள் இருக்கின்றன என்று கொள்ள வேண்டியதற்கான நியாயம் இருக்கிறதா? அவ்வாறில்லை என்பதுதான் நாம் அன்றாட வாழ்க்கையில் கூட உலகத்தில் அறிந்து, செயல்படுகிறோம் என்பதற்கான அடிப்படையே. ஆனால் அறிவோன்~அறிபடுபொருள்~அறியும்நெறி என்ற முப்புரிக்குள் அறியப் படவேண்டிய அனைத்தின் ஆழ அகலமும், அறிபவனின் இயல்பு முழ்தும், அறிவு நெறியின் சாத்தியப் பாடுகள் முழுமையும் அடங்கிவிடுகிறது என்று ஒருவிதத்தில் நாம் நம்பினாலும், ஒரு குறிப்பிட்ட கால தேச வர்த்தமானம் என்ற சூழ்வரம்பிட்ட ஒரு குறிப்பிட்ட நிலையில் பயின்றே நம் வாழ்வு என்னும் நத்தை ஊறும்போது முழுமையான பார்வை என்பது நமக்குப் பெரும்பாலும் மூடித்தானே கிடக்கிறது? நாம் பகுதிக்குள் ஒரு புள்ளியில் சமைந்து எடுக்கும் தீர்மானம், முழுமையின் பார்வையில் நமக்கே என்ன பொருள்படும்? அந்த முழுமையின் பார்வையிலேயே தன் கூடாரத்தை அடித்துக்கொண்டு ஒரு ஜீவன் தன் பகுதியின் பாற்பட்ட புள்ளிவிட்டுப் புள்ளிக்கு ஊரும் வாழ்வின் கணங்களைக் கணக்கிடுமானால் அஃது நம் குட்டைக்குறு பார்வையிலிருந்து எங்ஙனம் வேறுபடும்? மாறுபடும் என்பது இல்லையாயினும் கூட.?

ஆனால் இஃது இவ்வாறுதானோ? அவருடைய காலத்திலேயே, அதாவது 1885ல் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்தார் என்றால், 1879லேயே அவரைப்பற்றி, பிரம்மஸமாஜத்து ப்ரதாப் சந்திர மஜூம்தார் எழுதிய கட்டுரை என்னைக் கவலை கொள்ள வைக்கிறது. என் சுகமான சமாதானக் கோட்டையை வெறும் பேப்பர் கோட்டையாக ஆக்கிவிடுகிறது. காரணம் மஜூம்தார் ஸ்ரீராமகிருஷ்ணரை உயர்வாகவோ, ஒரு பொருட்டாகவோ கருதும் எந்த முன்னெண்ணமும் இல்லாதவர். அதுவுமின்றி ப்ரம்மஸமாஜம் ஹிந்துமதத்தின் ஏதோ ஒரு பக்தி பைத்தியமான ஒரு கிராமத்துக் கிழவரை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதுவும் ஹிந்துமதம் பற்றிய விமரிசனமே தன் தோற்றத்திற்கான பிரதான ஊக்கம் என்று எழுந்த ஓர் இயக்கம் அது. அதைச் சேர்ந்தவர் எவ்வளவு கறாராக இப்படிப்பட்ட ஒருவரை எந்தக் காரணத்திலாவது தள்ளுபடி பண்ணவே முனைப்பு கொண்டிருப்பாரே அன்றி ஒரு நாளும் பெரும் மதிப்பான வார்த்தைகள் எழுதும் வாய்ப்பு உள்ள மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் 1879ல் அவர் எழுதிய கட்டுரை என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. அதற்கு அந்த மஜூம்தாரே கருதாத அளவிற்கான சான்றாம் தன்மை காலத்தின் அமைப்பினால் வாய்ந்து எனக்குப் பல சௌகரியங்களைக் கெடுக்கின்றது. இதே மஜூம்தார் பின்னாளில் விவேகாநந்தர் அமெரிக்க சபையில் பெரும் வெற்றியடைந்த பின்னர் மிகக் கடுமையான அவதூறுகளை விவேகாநந்தர் மீது பரப்பினவரேதான். பின்னால் 1900க்குப் பிறகுதான் மடம், பதிப்பகம் என்று நிறுவனமயமாக்கம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரைப் பொறுத்தவரையில் ஏற்படப் போகிறது. இத்தகைய மஜூம்தார் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி எழுதியவை எனக்கு உரைக்கும் செய்திகள் பல. கிட்டத்தட்ட antogonistic mind தரும் சாட்சியாக மஜூம்தாரின் எழுத்து நிற்கிறது. விவேகாநந்தர் உரைத்தவற்றைக்கூட அவர்பால் மனம் தோய்ந்த ஒருவர் எழுதுகின்ற ஆர்வ எழுத்து என்று கருதிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மஜூம்தாரின் எழுத்து எந்த விதத்திலும் நாம் தள்ளிவிடுவதற்கான உளவியல், சூழ்நிலைக் காரணங்கள் அற்ற எழுத்து.

அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி எழுதுங்கால் கூறுவது --

If all his utterances could be recorded they would form a volume of strange and wonderful wisdom. If all his observations on men and things could be reproduced, people might think that the days of prophecy, of primeval, unlearned wisdom had returned. But it is most difficult to render his sayings in English. A living evidence of the depth and sweetness of Hindu religion is this good and holy man. He has wholly controlled his flesh. It is full of soul, full of the reality of religion, full of joy, full of blessed purity. As a Siddha Hindu ascetic he is a witness of the falsehood and emptiness of the world. His witness appeals to the profoundest heart of every Hindu. He has no other thought, no other occupation, no other relation, no other friend in his humble life than his God. That God is more than sufficient for him. His spotless holiness, his deep unspeakable blessedness, his unstudied, endless wisdom, his childlike peacefulness and affection towards all men, his consuming, all-absorbing love for God are his only reward. And may he long continue to enjoy that reward! Our own ideal of religious life is different, but so long as he is spared to us, gladly shall we sit at his feet to learn from him the sublime precepts of purity, unworldliness, spirituality and inebriation in the love of God.
(Protap Chunder Mazoomdar - Paramhamsa Srimat Ramakrishna: Theistic Quarterly Review, October, 1879.)

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் அடைந்ததாகச் சொன்ன அனுபவங்களின் மெய்மை என்ன? அவை உண்மை அனுபவங்கள் என்றால் எதை வைத்து உண்மை? அல்லது கற்பனை என்றால் வெறும் கற்பனைகளை நம்பி, சொல்லி வாழ்ந்த ஒருவர் மஜூம்தார் மாதிரியான ஆட்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க இயலுமா? இல்லை ஏதோ ஒரு விதத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது உண்மையாக இருக்கக்கூடும் என்றால் அது எந்த விதத்தில்?

உழக்குல கிழக்கு மேற்கு என்ன? தாங்களும் நம்பி ஏமாறினார்கள்; மற்றவர்களைத் தாம் நம்பியதைக் கூறி தாம் அறிந்தோ அறியாமலோ ஏமாற்றினார்கள் -- இந்த நிலைப்பாடு மிகவும் சௌகரியமானது. இல்லையேல் அதெல்லாம் நம்மால் அறிந்துகொள்ள இயலாத ஒரு மெய்மைத் தளம். நாம் அதற்கு எப்பொழுது நம்மை ஏற்புடையவர்களாக ஆக்கிக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் நமக்கு அது புரியும். அதுவரை ஆதிகாலத்திலிருந்து பல ஆன்மிகச் சான்றோர்களும், இறையியல் பெரியோரும் கூறியதை நம்புவதே வழி. -- இந்த நிலைப்பாடு அல்லது முன்னர் கூறிய நிலைப்பாடு இரண்டில் ஒன்று என்றபடிதான் அறிவுலகத்திற்கு இந்த பிரசசனை அறிமுகம் ஆகியுள்ளது.

இந்தப் புதைகுழியான இரட்டையைத் தவிர வேறு ஒரு வழியும் உண்டு என்பதை எனக்கு வேதாந்தம்தான் காட்டுகிறது. வேதாந்த தீபத்தில் அறிவு ரீதியான தேட்டம் கூர்மை பெறுவது போலவே, ஆன்மிக ரீதியான நாட்டமும் அறிவின் தெளிவைப் பெறுகிறது. ’பனுவல்’ என்பதை இற்றைய இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள் ஆழ்ந்து ஆய்வதைக் காணும் போது, நமது அறிவு ஈட்டமான முன்னேற்றம் நேர்கோடான பாதை உடையதா? அன்றேல் மண்டலித்தல் (வட்டச் சுழற்சி) என்னும் வகைப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.

இத்தகைய அறிவின் உச்சமும், ஆன்மிக வீச்சும் தம்முள் ஒத்திசையக் கண்ட பெருநெறி எதிர்காலத்தில்தான் ஏற்பட முடியும் என்று நினைப்பு ஒரு பக்கம் எழும் போதே மறுபக்கம் அத்தகைய பெரும் நிகழ்வு ஏற்கனவே மானுட ஆய்வுக்கூடத்தின் மாதிரியாக நம்மாழ்வார் என்ற மகத்தான திருமாலவன் கவியால் பல நூற்றாண்டுகள் முன்னரே இயன்றிருக்கிறது என்பதும், வேதாந்தம், பக்தி, அறிவின் அணுகுமுறையின் தத்வார்த்தங்கள் அனைத்தும் தம்முள் ஒரு பெரும் சமன்பாட்டைச் சாதித்த பெட்டகமாகத்தான் ஸ்ரீராமானுஜரின் நூல்களும், திருவாய்மொழிக்குத் தொடர்ந்து பல தலைமுறைகள் கண்ட உரைக் களஞ்சியமாக பகவத் விஷயம் என்ற பெருந்தனமும் திகழ்கின்றன என்ற மறுக்க இயலாத உண்மையும் கருத்தைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன.

எனவே இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்துகொண்டு நோக்குங்கால் ஸ்ரீராமகிருஷ்ணர் எனக்கு ஆன்மிகத்தின் பெரும் கவிதையாகத் தோன்றுகிறார். கற்பனை என்றவிதத்தில் அன்று. கற்பனை கடந்த, காலம் கடந்த, கால தேச வர்த்தமானத்தின் ஊடேயும், கடந்தும் நின்று பொலியும் முழுமையை உண்மை என்று சான்று பகரும் பெரும் கவிதையாக எனக்கு அர்த்தம் ஆகின்றவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அளவையியலால் அகப்படாத உண்மைகளை எப்படியோ நமக்கு உணர்த்தும் வல்லமை கொண்டது கவிதை என்னும் பொருளில் நான் பார்க்கிறேன். அதுவும் கவிதையின் ஆகமுழுமையான சாத்யவடிவம் மந்திரம் என்னும் நோக்கில் எனது தாத்பர்யம் இருக்கிறது. இந்த இடத்தில் ஸ்ரீஅரவிந்தரின் கவிதையின் மந்திரம் என்னும் உச்சபட்ச வடிவம் என்னும் கருத்து என் மனத்தில் இருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரும் அளவை இயலால் கடவுளைப் பற்றிப் புரியவைத்தவர் அன்று. தம் உள்ளார்ந்த நிலையின் உண்மையால். இப்படிச் சொன்னால் நான் அவர் எப்படி உணர்த்தினார் என்பதைப் புரிந்துகொண்டு விட்டேன் என்பதன்று. அவர் எப்படி உணர்த்தினார் என்பது மதவாதிகளே கூட அறிந்திராத ஒன்று. அவர் மதவாதிகள் கற்கும் பல சாத்திரங்களின் உட்கருத்துகளையும் பேசினார். ஆனால் அவர் அவற்றைக் கையாளும் போது நிஜத்தின் ஒளி அந்தக் கணத்திலும், அவரிடமிருந்து பொழிந்த வாக்கிலும் இருந்தது. அவரிடம் மொழி அதீதத்தைப் புலப்படுத்தும் ஒளியாய் ஆனது. அதுவே கவிதையின் உச்சபட்ச சாத்யதை. மொழியில் அவருக்குப் பெரும் கற்றறி புலமை என்பது இல்லை. அவர் தமக்கு இயல்பாகத் தம் வாழ்க்கையின் சூழலால் நேர்ந்த கிராமத்தார் பேச்சுநடையையே கையாண்டார். ஆனாலும் அது மொழித்திறன் முற்றிய புலவர்களின், மத்துறை கற்ற வல்லுநர்களின், நவீன கல்வியின் நயம்தெரி அறிஞர்களின் புதிராக, அவர்களை நிசப்தப்படுத்தும் ஒப்பனையற்ற அதீத உண்மைகளின் பொழிவாக நடந்தவண்ணம் இருந்தது. எனவேதான் அவருடைய முழு ஆளுமையே, வாழ்க்கையே எனக்கு கவிதையின் ஆத்மாவாக, கவிதையின் ஆக உயர்ந்த, பொலிந்த நிசத்தின் வடிவாம் மந்திரம் என்பதின் வடிவாகத் தோன்றுகிறது.

***

No comments:

Post a Comment