Saturday, January 25, 2020

வேதம் என்றால் என்ன?

வேதம் என்றால் என்ன என்பதற்கு மிக அழகாக ஒரு விளக்கம் தருகிறார் ஸ்ரீஸாயணாசாரியார் தமது க்ருஷ்ண யஜுர்வேதீய தைத்திரீய ஸம்ஹிதையின் வியாக்கியானத்தில். ஸாயணர் வேதங்களுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதி உபகரித்த மகனீயர். வேதார்த்தம் நன்கு பொலியச் செய்தவர். வேதம் என்றால் எதைக் குறிக்கும்? மனிதருக்குத் தமக்கு விருப்பமானவற்றையும், தேவையானவற்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு இஷ்ட ப்ராப்தி என்று பெயர். தமக்கு வேண்டாதவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும், அவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு அநிஷ்ட பரிஹாரம் என்று பெயர். மனிதர் தம் வாழ்வில் தொடக்க முதல் பலவற்றையும் விரும்பிப் பின்னர் அதுவே வேண்டாம் என்று ஆகி, சிலவற்றை வேண்டாம் என்று ஒதுக்கிப் பின்னர் ஒரு காலத்து அது வேண்டும் என்று விரும்புவதும் வழக்கம். இது மனிதர் தம்முடைய அறிவு நிலை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து இஷ்ட ப்ராப்தியும், அநிஷ்ட பரிஹாரமும் ஏற்படும். அதற்கு உண்டான வழிமுறைகள் அவரவர் அனுபவத்தில் ஆரம்பத்தில் சாதாரணமான இஷ்டம், அநிஷ்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தெரிய வரலாம். சிலது பிறரைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அறிவு முதிர முதிர எது இருப்பதில் மிக உயர்ந்த இஷ்டம் என்றும், எது மிகவும் அவசரமாகவும், என்றைக்குமாகவும் விலக்கிக் கொள்ள வேண்டிய அநிஷ்டம் என்றும் தெளிவு ஏற்படும். அதனால் உயர்ந்ததும், மிகச் சிறந்ததுமான வழி எது என்ற தேட்டம் உண்டாகும். நிச்சயம் உலகில் அதுகால் அறிந்த வழிகள் எதுவும் பயன்படா என்பது புரியத் தொடங்கும். எதை எதையெல்லாம் இஷடம் என்று மயங்கினரோ அதெல்லாம் உண்மையில் வேண்டாதது என்றும், எதை இதுவரையில் தாம் நினைத்துப் பார்க்கவே இல்லையோ அதைப் பற்றிய ஓர் உள்ளுணர்வும், அதன் மீது தீவிர நாட்டமும் உண்டாகும். உலகியல் ரீதியாகப் பயன்படக் கூடியது என்பதை பிரத்யக்ஷம், அனுமானம் இவற்றைக் கொண்டு அறிந்தது போக, உலகியல் முற்றிலும் சாராத ஒன்றை எப்படி அறிவது?, அந்நிலையை அடையும் உபாயம் யாது?, அந்த உபாயம் நிச்சயம் உலகியல் கடந்த ஒன்றாய்த்தான் இருக்க முடியும். எனவே அலௌகிகம் என்பதான தேட்டம் ஏற்படும் போதுதான் வேதம் என்பதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவரும். வேதம் முக்கியம் என்று புரிந்தாலும் அதைக் கற்று, அதன் தாத்பர்யத்தை உணருதல் பெரும் கடினம். ஆகையாலே அனைவரும் வேதக் கருத்துகளை நன்கு அறியும் வன்ணம் தரப்பட்டதுதான் புராணங்களும், முக்கியமாக பாரதமும் என்கிறார் ஸாயணர்.


”இஷ்டப்ராப்தி அநிஷ்டபரிஹாரயோ: அலௌகிகம் உபாயம் யோ கிரந்தோ வேதயதி ஸ வேத:’

’ப்ரத்யக்ஷேண அநுமித்யா வா
யஸ்து உபாயோ ந புத்யதே|
ஏநம் விதந்தி வேதேந தஸ்மாத்
வேதஸ்ய வேததா||’

ஆனால் வாழ்க்கையில் அலைந்து, திரிந்து, விழுந்து, பதறி, ஓடிக் கடைசியில் ஏதோ அவன் புண்ணியத்தால் ஏதோ ஒரு வாய்ப்பிலே தெய்வ சிந்தனை பிறந்து நாம் முழித்து முழித்துப் பார்க்கும் அந்த நிலையை முன்னமேயே கண்டு நமக்காகப் பாவம் இரங்கி பெரியாழ்வார் சொல்லும் வழி -

‘நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நாரணா! என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!
உன்னுமாறுன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே ‘நமோநாரணா’ என்பன்.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment