Tuesday, January 14, 2020

மின்னாடும் பரவெளியில்

மின்னாடும் பரவெளியில்
முன்னாடும் பரமனவன்
பின்நாடிப் பயின்றுவர
என்னாடிக் கண்ணகலக்
கிண்ணகமாய்க் ககனமுற
எண்ணாத வகையெல்லாம்
என்னாகத் தூறிவர
விண்ணாரும் வீதிகளில்
விரைசந்தில் விசைமுடிக்கி
விந்தை விரிநிகழாய்
வளையவரும் சொல்சொடுக்கி
திளைக்கத்தான் தீர்மானம்

மார்களித்த மகத்துவத்தில்
தைவந்த தீர்க்கத்தில்
மாசில்லா மோகத்தில்
பல்குணியாய்ப் பரமாகி
சித்தத்தின் திரையவிழ
வைகல் விடியொளியில்
ஆனின்ற தத்துவமாய்
ஆடிவரும் சித்துருவாய்
ஆவணிந்த கன்றுகந்த அச்சுதர்க்கே
ஐப்பசியால்
புரட்டி வரும் வாசியினை
கார் திகையா தீபமென காத்த கையால்
தயங்காத திறனில் திறக்கின்ற தெருவூடே
தட்டழுத்தித் தடை தாண்டி
தெரிகின்ற காட்சியினில்
தெரியாத விடை ஏறித்
துரியத்தில் பரமசிவம்
புரிகின்ற சாலமெல்லாம்
பொற்கோலம் ஆகிடவும்
அறிகின்ற புலனருவி
அறியாத புலமுருவி
ஆர்வத்தீ முனையுமிழும்
ஆகத்தேன் மலர்த் துளியில்
பாழ்குடித்த மிச்சமிது
பக்குவமாய் வைத்திடுவோம்!
ஆழ்ந்திருக்கும் பொருளுமுண்டு
அகழ்ந்து கொள வாழ்ந்திடுவோம்.

***

No comments:

Post a Comment