Wednesday, January 29, 2020

வேதங்களில் விஞ்ஞானம்

அறிவியல் சம்பந்தமான கருத்துகள் பல வேதங்களில் விரவிக் கிடப்பதை ஒரு பண்டிதர் தம் வாழ்நாளில் பல காலமாகக் கட்டுரைகளாக எழுதிவந்தார். அவற்றைத் தொகுத்து ‘வேத விஜ்ஞானம்’ என்ற நூலாகப் பிரசுரம் செய்திருக்கிறார்கள். ஆசிரியர் நாவல்பாக்கம் தேவநாதாசார்யர் என்னும் வித்வான். திருமலை சதுர்வேத சதக்ரது தேவநாதாசார்யர் என்னும் பெயருடைய நாவல்பாக்கம் தேவநாதாசார்ய ஸ்வாமி பல சமயங்களில் பல இதழ்களுக்கு அவர் எழுதிய கட்டுரைகளில் 12 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. சுமார் 220 பக்கங்கள் கொண்ட இந்த நூல், முதல் பதிப்பு 2003, அன்று விலை ரூ125, இன்று எவ்வளவு தெரியவில்லை. பதிப்பாசிரியர் திரு பி எஸ் ராமநாதன். மிக அரிய களஞ்சியம் இந்த நூல் என்று சொல்லலாம். இத்தகைய பார்வைகள் கொண்டோர் மிக அருமை. வழி வழிக் கல்வி உள்ளவர்களுக்கு இந்த கண்ணோக்கம் அமைவது, அவ்வாறான கருத்துகளை விளக்கமாகக் குறிப்புகள், ஆதாரங்கள் இவற்றுடன் ஆற்றொழுக்கு நடையில் தருவது எல்லாம் நன்றாக இருக்கின்றன. வேதங்கள் பற்றிய கூர்த்த கவனத்தை இந்த நூல் உண்டாக்குகிறது. பல வருடங்கள் முன்பு இவரை எனது பெரியப்பாவுடன் சென்று பார்த்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் அமைதியான பேச்சு. ஆழமான பார்வை. பரபரப்பு இல்லாமல் கருத்துகளை விளக்கும் நேர்த்தி. பன்னிரண்டு கட்டுரைகளின் தலைப்புகளே ஆசிரியரின் வித்யாசமான பார்வையைச் சொல்லுகின்றன.

1) பூமி எரிகின்றது.

2) மரம் பயப்படுகின்றது.

3) ஒரு வருஷம் ஒரு நாள்

4) முப்பது சகோதரிகள்

5) நீருள் நெருப்பு

6) உபவாஸம்

7) அக்னியா

8) கைக்குத்தலரிசி

9) ஐந்திரவ்யாகரணம்

10) கணிதம்

11) கழுதை

12) நக்ஷத்திரங்கள்

என்பன அந்தத் தலைப்புகள். ஆரம்பிக்கும் பொழுதே, ‘பூமி எரிகின்றது’ என்னும் கட்டுரையில், ‘வேதங்களில் விஜ்ஞான ஸம்பந்தமான விஷயங்கள் பலவிடங்களில் காணப்படுகின்றன. கிருஷ்ண யஜுர் வேதம், தைத்திரீய ஸம்ஹிதை, ஐந்தாம் காண்டம், ஆறாவது ப்ரச்னம், நான்காவது அனுவாகத்தின் முடிவில்:

ஸர்வா வா இயம் வயோப்யோ நக்தம் த்ருசே தீப்யதே தஸ்மாத் இமாம் வயாம்ஸி நக்தம் நாத்யாஸதே...-

என்னும் வாக்யம் காணப்படுகின்றது. இதன் பொருள்:- “இந்த பூமி முழுதும் இரவில் பறவைகளின் கண்களுக்கு நெருப்பு போல் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் இரவில் பறவைகள் பூமியில் தங்குவதில்லை. (மரங்களின் உச்சியிலேயே இருக்கின்றன)” என்பது.’ என்று ஆசிரியர் தொடங்கும் பொழுதே நமக்கு ஆர்வம் மிகுதி ஆகிவிடுகிறது. வேதங்கள் இது போன்ற விஜ்ஞானக் கருத்துகளைக் கூறுமிடத்துப் பெரிதும் கதைகளின் உருவத்தில் கூறுகின்றன. அந்தக் கதைகளை நன்கு ஆய்ந்து தற்கால விஜ்ஞானக் கருத்துகளின் ரீதியாக என்ன சான்றுடைமை கொள்கின்றன என்பதை ஒப்பீடு ஆய்வாகப் படிப்பது நல்லதொரு கல்வியாக அமையும். மேலும் எழுதுகிறார் நாவல்பாக்கம் ஸ்வாமி:

முதல்முதலாக இந்த பூமி தோற்றுவிக்கப்படும் போது, அது ஒரு பறவை வடிவமாகவே தோற்றுவிக்கப்பட்டது. அதுவும் தன்னுள்ளே அக்னியைக் காப்பாற்றி வைப்பதற்கேற்றதோர் ஓமகுண்ட வடிவமாகவே அமைக்கப்பட்டது. ஐந்து இஷ்டகைகளால் அமைக்கப் பெற்றது. அதனால் பூமியும் பறவைகளும் ஒரே இனத்தைச் சார்ந்தவை.

அடிக்குறிப்பில் இஷ்டகைகள் - மேற்கூறியவாறு பறவை வடிவமான ஓமகுண்டம் அமைப்பதற்காக மண்ணால் சிறு அளவில் தயாரிக்கப்படும் கட்டிகள்.

-- இவ்வாறு எழுதும் போது அடிக்குறிப்பில் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களையும் தருகிறார். தன்னுள்ளே அக்னியைத் தாங்கியவாறே பூமியானது படைக்கப்பட்டது என்பதற்கு அவர் காட்டும் வேத வாக்கியம் - யதாக்னி கர்பா ப்ருதிவீ (ப்ரு உப 6.4.21) அது போல் நூலில் நக்ஷத்திரங்கள் பற்றிய இவருடைய அரிய கட்டுரை. முதலில் 33 நக்ஷத்திரங்கள் இருந்து பின்னர் 28 ஆகக் குறைந்து, பின்னர் அபிஜித் என்னும் நக்ஷத்திரம் விழுந்து விட்டதால் இன்று 27 நக்ஷத்திரங்கள் மட்டுமே கணக்கில் இருப்பதாக மரபு நூல்களின் ஆதாரங்களுடன் கூறுகிறார். இங்கு 27 நக்ஷத்திரங்கள் என்பன நக்ஷத்திரக் கூட்டங்கள் என்று பொருள்படும் என்னும் அவரது விளக்கம் அருமை. 27 நக்ஷத்திரக் கூட்டங்களுக்கும் அவற்றின் தேவதைகள் என்ன, அந்த அந்தக் கூட்டத்தில் எத்தனை நக்ஷத்திரங்கள் உள்ளன, தாரா கணக்கு என்ன, ஆங்கிலப் பெயர் என்ன என்ற அட்டவணையும் தருகிறார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment