Wednesday, January 29, 2020

கப்பல் கோவை

சாதாரணமாக, பண்டைய செய்யுள் வகைகளைப் பற்றிக் கேள்விப் பட்டவர்கள், சிற்றிலக்கிய வகைகளை அறிந்தவர்களுக்குக் கோவை என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். கோவை என்றால் ஒன்றும் குழப்பம் இல்லை. கோக்கப்படுவது கோவை. ஆந்தாலஜி, கலக்ஷன் என்று சொல்லலாம். ஆனால் வெறுமனே எதையாவது கோத்ததா என்றால் இல்லை. தொல்காப்பியத்தில் அகத்துறைச் செய்திகள் கைக்கிளை தொடங்கி, காட்சி நலம் உரைத்தல் ஆரம்பமாக பல நிலைகள். ஆண், பெண் இருவரும் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் இரண்டு பேரும் உயிருக்கு உயிராகக் காதல் பூண்டு விடுவதைத்தான் சங்கப் புலவர் ஆழ்ந்து ஆய்ந்து நோக்கி ஓர் இயலாகவே ஆக்கி வைத்துள்ளனர், அகத்திணை என்று. அதாவது வாழ்க்கையையே இனிமை ஆக்கும் விஷயம் எது? தன் உள்ளம் கவர்ந்த காதல், உயிர்க்காதல், இதுதான் இந்த மற்றபடி பல கஷ்டங்கள் சோகங்கள் நிறைந்த மனித வாழ்வை 'இனிமை' என்று ஆக்குவதே. இந்த இனிமைக்கு ஓர் இயல் என்று சொன்னால், ஆணும் பெண்ணும் உள்ளம் கலந்து அவர்க்கு இடையிலான இலட்சியக் காதலை அன்பின் ஐந்திணையாக, ஆருயிர்க் காதலுக்கு இலக்கணமாக, அகத்திணை என்று இயலே இருக்கிறது. இறையனார் களவியல் உரையில், "இந்நூல் என் நுதிலிற்றோ எனின் தமிழ் நுதலியதென்பது" என்று அகத்திணை இலக்கணம் சொல்ல வந்த ஒரு நூலை உரை இந்த நூல் தமிழ் நுதலிற்று என்று 5-6ஆம் நூற் இல் அறிமுகப் படுத்துகிறது. தொல்காப்பியம் இந்த மனித வாழ்வின் இன்பம் ஆகிய அகத்திணை என்னும் தமிழைப் பல்துறைகளால் வகுத்து வைத்தது. ஆயினும் இலக்கணம். சூத்திரம். நூற்பா உணர்த்தும் கருத்தை உள்ளவாறு புரிந்து கொண்டாலும் இலக்கணமும், இலக்கியமும் ஒருங்கே நடைபெற வேண்டும் என்று விழையும் ஓர் ஆசிரியர் அந்தத் துறைகளை எல்லாம் ஒருங்கு படுத்தி ஓர் உள இயல் மாற்றத்து படிநிலை எழுச்சியாக அமைத்து சுமார் 400 கட்டளைக் கலித்துறைகளால் ஆனதாக அமைத்தால் அதுவே கோவை ஆனது.

வச்சணந்தி மாலை இதனை, 'ஆய்ந்த கலித்துறைதான் நானூ றகப்பொருண்மேல் வாய்ந்த நற்கோவை மற்றுரைப்பின்' என்று வெளிப்படுத்தும். பன்னிருபாட்டியலோ, 'கோவை என்பது கூறுங்காலை, மேவிய கற்பு களவெனுங் கிளவி, ஐந்திணை திரிய, அகப்பொருள் தழீஇ, முந்திய கலித்துறை நானூறென்ப.' என்று கூறும். இவ்வாறு புலவர்கள் அகப்பொருள் துறைகளை, முதலில் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் காணும் வாய்ப்பு தொடங்கிப் பின்னர் மணப்பேறு வரை பல துறைகளாகப் பாடுவது அக்காலத்து செய்யுள் மரபில் அமைத்துப் பாடுவது மரபு. இதனை ஆன்மிக உள்ளீடு பொதியப் பாடிய திருக்கோவையாரில் நூலுக்கே கோவை என்று திருத்தமுறப் பெயரே அமைந்து விட்டது. அங்ஙனமே திருமால் காதல் பொதிய நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் கோவை இலக்கணம் கொண்டது. தெய்வங்களைக் குறித்து கோவைகள் பாடப்பட்டது ஒரு வகை என்றால் நல்ல குணங்கள் பொருந்திய இறையாண்மை கொண்ட மனிதர்களைக் குறித்தும் கோவைகள் பாடப்பட்டன. இதில் பாண்டிக் கோவை பழமை மிக்கது என்பர். இந்தக் கோவை இலக்கணமே மேலும் நன்கு செவ்வை உற்று களவியல், வரைவியல், கற்பியல் என்று தெள்ளெனப் பகுப்புண்டு அமைந்த வகையை நாம் தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக் கோவை ஆகிய கோவை நூல்களில் காணலாம். நான் சொல்ல வந்தது இவ்விதம் மிகத் திருத்தமான வடிவை அடையாத கோவை இலக்கணம் கொண்டு பாடப்பட்ட, மனிதரைப் பாடிய கோவை நூல் ஒன்று. பழம் கோவை நூல்கள் என்ற கணக்கில் சேருவது. 13ஆம் நூற் ஐச் சேர்ந்தது. கப்பல் கோவை என்னும் பெயரினது.

அது என்ன கப்பல்? இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கருமாணிக்கன் என்னும் பெயரினன். பாண்டி மண்டலத்தில் ஒரு பகுதியாய் இருந்ததும், இப்பொழுது புதுக்கோட்டையைச் சேர்ந்ததுமான கப்பலூர், துவரங்குறிச்சி ஆகிய ஊர்கள் கொண்ட பரப்பை ஆண்டவன். குறுநில மன்னன். பாண்டிநாட்டு படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்து, கல்வி கேள்விகளிலும், அருங்கலைகளிலும் மிக்க கீர்த்தி கொண்டவன். யாதவர் குலச்செம்மல். வைணவ சமயத்தினன். துளவம், முல்லை, குவளை ஆகியவற்றைத் தன் குல மாலையாகவும், போர் மாலையாகவும் கொண்டவன். திருமாலின் அவதாரச் செயல்கள் பலவற்றை இந்த நூல் இக்குறுநில மன்னனுக்கு ஏற்றிப் பாடுகிறது. தென்னிந்திய சாஸனம் வால்யூம் 4,112 இவனை, 'முத்தூர்க் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர்க் கருமாணிக்காழ்வான்' என்று குறிப்பிடுகிறது. ஜடாவர்ம சுந்தரபாண்டியன், ஜடாவர்ம வீரபாண்டியன், மாறவர்ம குலசேகரன் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் இருந்தவன் இவன். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவை நூல். பாடப்பட்டவரின் பெயர் தெரிந்தாலும், பாடியவர் யார் என்று தெரியாமல் போனது வருத்தத்திற்குரியது. ஆனாலும் நூலின் ஆசிரியர் பண்டைத் தமிழ் நூல்களில் துறை போய ஞானம் மிக்கவர் என்பது தெள்ளிய இன்பம் மிக்க அவர்தம் பாடல்களில் தெற்றெனப் புலனாகிறது. இந்த அரும் நூலைக் கிடைத்த சில பிரதிகள் கொண்டும், டாக்டர் உ வே சா அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் கொண்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும் திரு எல் ஸ்ரீநிவாசய்யர் என்பார் பதிப்பாசிரியராக மெட்ராஸ் கவர்ன்மெண்டு ஓரியண்டல் சீரீஸ் 1958ல் கொண்டு வந்துள்ளது.

கப்பல் கோவை என்னும் இந்நூல் 30 துறைகளில் காதலம் வாழ்வின் எழுச்சியை அமைக்கிறது. கைக்கிளை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கிமதியுடன்பாடு, பாங்கியிற்கூட்டம், ஒருசார் பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறி இடையீடு, வரைதல் வேட்கை, வரைவுகடாதல், ஒருவழித்தணத்தல், வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல், வரைவு மலிவு, அறத்தொடுநிற்றல், உடன்போக்கு, கற்பொடுபுணர்ந்த கவ்வை, மீட்சி, தன்மனைவரைதல், உடன்போக்கு இடையீடு, வரைதல், இல்வாழ்க்கை, பரத்தையிற்பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, பகைதணி வினைப்பிரிவு, உற்றுழிப்பிரிவு, பொருள்வயிற்பிரிவு, துறவறம்.

முதலில் கைக்கிளை என்பதை எடுத்துக் கொள்வோம். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து மனம் கலந்து பழகும் உறவுதான் உள்ளபடியான அன்பு. இனித்தான் நேருறக் காணப் போகின்றனர்; நெஞ்சும் மாறிப்புக்கப் போகின்றனர் என்றால் காதலர்பால் உள்ளது கைக்கிளை. கைக்கிளையின் போது என்ன உணர்ச்சிகள் இருக்கும். காட்சியை வியப்பார்; ஐயம் கொள்வார் - இப்படி இந்த மனநிலைகளைத்தான் கைக்கிளை என்னும் துறை பாடும். இது போல் மற்ற துறைகள்.

முதலில் கண்டவர் பாடுகிறார் – காட்சி

சீர்தங்கு பங்கயம் கொண்டல்
பொற்கோங்கு அலர் செங்குமுதம்
கூர்தங்கு முல்லை குமிழ்நெய்தல்
பூத்து ஒரு கொம்புசெம்பொன்
கார்தங்கு செங்கரத்தான்
கருமாணிக்கன் கப்பல் என்னும்
ஊர்தங்கு சோலையின்கண்
ஒருகாலத்து ஒளிர்கின்றதே.

பொருப்போ? கருங்கடலோ? பொழி
லோ? உயர்பொன்னுலகோ?
விருப்பொடு பன்னக மேவுல
கோ? விரைநாண்மலரோ?
சுருப்பொடு மேவுதண் தார்த்தொண்டை
மான் கப்பல் சூழ்சிலம்பின்
மருப்போ? எனும் தனவல்லி,அன்
னாருக்கு வாழ்பதியே!

பழகிய பின் பெற்றாரை வாழ்த்துகிறான்:

கந்தார் கட களிற்றான் கரு
மாணிக்கன் கப்பல் வெற்பில்
வந்து ஆவி பெற்று மகிழும் நெஞ்
சே! வளமாய் உனக்குச்
சிந்தாமணியைத் தெவிட்டா
அமுதைத் திருவை இங்ஙன்
தந்தார் இருக்க என்னோ சல
ராசி தவம் பெற்றதே.

கலித்தொகை காட்டும் காட்சி போன்று வழியில் முக்கோல் பகவர்களைப் பார்க்கிறாள் செவிலித்தாய். திரிதண்டம் தாங்கி, முந்நூல் அணிந்து, செம்மை ஆடையும், திருமால் நெறியும் மிக்கார் எதிர்வரக் கேட்கிறாள்

குடையும் கரகமும் தோலும் முந்
நூலும் முக்கோலும் செம்மை
உடையும் தரித்து ஒல்கி முன்வரு
வீர்! கடல் உள் அமையக்
கடையும் புயல் தொண்டைமான் கரு
மாணிக்கன் கப்பல் வெற்பில்
விடையும் புணர்துணையும் வந்த
தோ இந்த வெஞ்சுரத்தே?

முக்கோல் பகவர் அவளைத் தெருட்டுகின்றனர்.

கற்று ஆயரில் வளர்ந்தோன் கரு
மாணிக்கன் கப்பல் மன்னன்
பொற்றாள் முளரி பொருந்தலர்
போலப் புகை எழும் தீ
வற்றாத வெஞ்சுரம் வந்தது
நீ மடவாய்! மகவைப்
பெற்றாயும் இல்லைப் பிறந்தாயும்
இல்லை ஓர் பெண் வயிற்றே!

பாடல் 391ல் ஒரு சரித்திரச் செய்தி உள்ளதாகக் கூறுகிறார் திரு ஸ்ரீநிவாசய்யர். திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடத்தைச் சேர்ந்த ஒரு முனிவரை கப்பலூரில் வந்து வதியுமாறு வேண்டி, அவர் வந்து தங்க அனைத்து வாய்ப்பும் செய்தனன் கப்பலூர்த் தலைவனான கருமாணிக்கன் என்பதை பாடல் தெரிவிப்பதாக ஸ்ரீராவ்ஸாஹிப் மு இராகவையங்கார் ஸ்வாமிகளின் கருத்தைக் காட்டி அவர் கூறும் பாடல் –

கோவல் அமர் முனி கொண்டு வந்து
ஏத்தும் முத்தூர்த் துவரைக்
காவலன் எண் எண் கலைக் கரு
மாணிக்கன் கப்பலன்னீர்
மேவலர் தம் வினைமேல் பிரிந்
தோர் இன்று மீண்டனர் நம்
மா அலர் சோலை மறுகு எங்கும்
ஆர்க்கும் வலம்புரியே.

மொத்தம் 398 பாடல்கள். நறுந்தேன் அனைத்தும் தமிழைக் காதலிப்பார்க்கு கப்பல் கோவை அரும் நூல்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment