Saturday, January 25, 2020

புலரியெழப் போந்த கதிர்

புலரியெழப் போந்த கதிரின் கருவில்
புன்னிருள் சுமந்தாலொப்பக்
கலைதெரி மாந்தர்க்காகும்
கதிப்பேற்றியல்கள் தம்மில்
விதியெனச் சூல்கொள் இருளும்
வதமுற வந்த போதம்
பதமுற நிவந்த மாதம்
துதிபெறு மார்கழி ஆகி
உத்கீத ப்ரணவமே ஆம்
உத்தமர்க்கு உள்ளம் தந்தே
உயர்வற உயர்ந்த செந்நூல்
துயரறத் திளைத்த செம்மை
மயர்வற மதிகிளர்ந்த
மாதவ மாட்சிக்கே யாம்
அயர்வறும் அமரரானோம்
ஆங்கது வீடேயானோம்.

பெற்றதோர் பேற்றை ஈண்டு
பேணியுள் காத்தொளித்தே
கற்றிடும் கரவு வேண்டோம்
உற்றிடும் நரகமேனும்
உவந்து அவண் செல்வோம் என்றே
உள்ளத்தால் உயர்ந்து நின்ற
உடையவர் உடையார் ஆனோம்
கள்ளத்தைக் கடிந்து நிற்போம்
கரிய வன் நெஞ்ச வஞ்சத்துப்
பகையெலாம் பொடிந்து நிற்போம்
உரியவர் உலக மாந்தர்
அனைவரும் உயர்வுக்கென்போம்
பாரத நாட்டிலிங்கு
பிறந்தவர் வீட்டிற்கெல்லாம்
ஆண்டாள் நற்குழுவாய் ஆகி
அன்பிற்கே உரிமை பூண்டு
ஒல்லை நீ போதாய்
உனக்கென்ன வேறுடையை?
இன்னம் உறங்குதிரோ?
சிற்றஞ் சிறுகாலே
வந்தும்மை உற்றோமாய் வந்தோம்
மனிதகுல உறவினால் ஒன்றானோம்
உயிர்க்குல அன்பினால் உலகத்தை
நனைத்தில்லம் சேறாக்க
அனைத்தில்லத்தாரும் அறிந்தீரோ
என்றழைப்போம்
அதுவே யாம் பாடும்
மகிழ்ந்தேலோர் எம்பாவாய் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment