Sunday, January 26, 2020

தமிழில் வேதாந்த நூல்கள் இரண்டு

தமிழில் விசிஷ்டாத்வைதம் தொடர்பாக வந்திருக்கும் சிறிய பெரிய நூல்கள் அதிகம். பல தரப்பான பக்குவம் உள்ள மக்களுக்கு என்று சுருக்கம், விரிவு, அறிமுகம், கையேடு என்னும் விதங்களில் பலரும் நூல்கள் இயற்றியுள்ளார்கள். இன்று பார்க்கும் பொழுதும் தமிழில் வேதாந்தம் போதிக்கும் முயற்சிகள் என்னும் விதத்தில் ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஷண்மத தர்சநீ என்னும் நூல். மொத்த பக்கங்களே 24 தான். சாங்க்ய மதம், பாதஞ்சல மதம், பௌத்தம், உட்பிரிவுகள், ஜைனம், பாஸ்கர மதம், யாதவ மதம், மாத்வ மதம், மாயாவதி மதம், விசிஷ்டாத்வைத மதம் என்று தர்சனங்கள் பலவற்றின் சுருக்கமான அறிமுகங்கள், அவற்றின் மீதான கண்டனங்கள் என்று விசிஷ்டாத்வைத நோக்கில் நூல் அமைந்திருக்கிறது. உரைநடை நூல். மீண்டும் பதிப்பித்துள்ளனர் போலும். எனவே நூல் பிழைத்தது.

*
அடுத்து முதலியாண்டான் தாசர் என்பவரால் செய்யப்பட்ட வேதாந்த ஸார ஸங்க்ரஹம் என்னும் நூல். வந்த ஆண்டு பராங்குச திரு அவதார வருஷம் 5000. (கி பி 1899) சென்னை ஸ்ரீநிகேதந அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலைத் தமிழில் கொஞ்சம் வித்யாசமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இன்று நாம் சொல்லும் ரெடி ரெக்கனர் மாதிரி கொஞ்சம், அரும்பத நிரல் பொருள் விளக்கம் மாதிரி கொஞ்சம், துணை நூல் மாதிரியான பொருள் வாரியான சிறு விளக்கங்கள், கூடவே ஷண்மத தர்சநியில் செய்திருப்பது போல் பல மதங்களைப் பற்றிய அறிமுகம், கண்டனம், பிரமாண நூல்களில் சொல்லியிருக்கும் பொருள்களைப் பற்றிய சுருக்கம் என்று 70 பக்கங்களில் கையடக்கமான ஒரு நூலில் 700 பக்கங்களுக்கான செய்திகளையும், கருத்துகளையும் ஆசிரியர் அடக்கியிருக்கிறார். நூலின் சிறப்பு விசிஷ்டாத்வைத வேதாந்த சொற்களை நிரல் இட்டு, ஒவ்வொன்றிற்கும் பொருளும் கொடுத்திருப்பது, ஆசிரியர் அந்தக் காலத்தில் தமிழின் வழி வேதாந்தம் கற்பாருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்திருப்பது புலனாகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment