Sunday, January 12, 2020

சைக்கிளிங் ஒரு அனுபவம்

சைக்கிளிங்கில் என்னுடைய வென்சர்ஸ் அது ஒரு கதை பல வருஷங்களுக்கு முன்னால். திடீரென்று சைக்கிளின் மீது அலாதியான மோகம். உலகத்தில் சைக்கிளின் சித்தாந்தம் என்றே ஒன்று தனிப்பட இருப்பதாக ஒரு வேகம். இந்தப் பிசாசுகள் பிடித்தால் என்னைப் பாடாய்ப் படுத்திவிட்டுத்தான் போகும். மனிதன் என்பவன் ரேஷனல் அனிமல் அது இது எல்லாம் அப்புறம். முதலில் மனிதன் சைக்கிளிங் அனிமல். மனிதன் நடக்க விதிக்கப்பட்டவன் அன்று. அவன் பெட்ரோல் வண்டிகளை ஓட்டுவது மகாபாபம். பெரிய பெரிய கனரக வாகனங்களைக் கண்டு பிடித்தது எல்லாம் ஜுஜுபி. என்று சைக்கிளைக் கண்டு பிடித்தானோ அன்றுதான் அவனை பூமித்தாய் மெச்சிக் கொண்டாள். அடேயப்பா! சைக்கிளில் போகும் போது நமக்கு வேண்டும் அளவிற்கு வேகம், மெதுவாக, உருண்டு, பைய நகர்ந்து, ஊர்ந்து எப்படி வேண்டுமானாலும் போகலாம். எதிரே காற்று வரும். ஆஹா! அந்தச் சுகம். அக்கம் பக்கம் எல்லாம் என்னன்னவோ மணங்கள், நாற்றம், குரல், பாட்டு, பறவையொலி, நாய், மாடு. எல்லாவற்றையும் கடந்து நாம் போய்க்கொண்டு இருப்போம். நம்மை எல்லாம் கடந்து போகும் என்பதற்குப் பதில் நாம் எல்லாவற்றையும் கடந்து போகிறோம் என்பதே ஒரே கிளப்ஸ் தான். நேரே போனேன். பிஎஸ் ஏ கம்பெனியில் போய் ஷிமானோ 18 கியர் பைக் ஒன்று வாங்கினேன். அன்றைக்கு அது ரூ3000 விலை. மௌண்டன் பைக். பின்னர் சைக்கிள் என்றால் ப்ரொஃபெஷனல் சைக்கிளிஸ்டாக ஆகவேண்டாமோ? போய் முதல் காரியம் சைக்கிளிங் ஹாபி பற்றி கத்தை லிட்ரச்சர் எல்லாம் வங்கிக்கொண்டு வந்தேன். உண்மையிலேயே நான் நினைத்தது சரி.

சைக்கிளிங் என்பதே ஒரு வாழ்க்கை முறை. சித்தாந்தம். உலகத்திலேயே இரண்டு பிரிவாக மக்களைப் பிரித்துவிடலாம். சைக்கிளிஸ்ட். வர்ஸஸ் சைக்கிளிஸ்ட் அல்லாதார் என்று. முதல் வென்சர் ஷிமானோவில் நேராகக் கிளம்பி பழைய மஹாபலிபுரம் ரோடு வழியாக மஹாபலி புரம் போய் வருவது என்று. ஸோலோவாக. திருப்போரூரில் நின்று கொஞ்சம் டீ பிஸ்கட்,
காலையில் 10 மணிக்குக் கிளம்பியவன் மஹாபலி புரத்திற்கு பிற்பகல் 2/30 போய்ச் சேர்ந்தேன். உணவு அங்கே. பின் ரிடர்ன். உங்களுக்கு எப்படிச் சொல்வது? அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. உலகத்திலேயே அனுபவிக்கத் தெரிந்தவன் யார் தெரியுமா? பரிவ்ராஜக ஸந்நியாசிதான்.

ஓடும் நதியும் பரவும் காற்றும்
ஒரு நாளும் அவைதான் கெடுவதில்லை.
பரந்த வானும் திறந்த மண்ணும்
பாயும் நதியும் மரநிழலும்
பசித்தால் கிடைத்ததும்
இல்லையேல் இலையும்
இருகை ஏந்தும்
நீரும் இருக்கக் கவலையில்லை.
நில்லாமல் போ
நிற்காமல் வா

அல்லல் எதுவும் இல்லையிங்கே
பல்விதமாயின பாரின் காட்சி
சொல்விதம் கடந்த சோதியின் திரட்சி
நல்விதம் அல்விதம்
அனைத்தும் எறிந்து
நடையைக் கட்டு சகோதரா!
நலிவும் இல்லை
நமச்சல் இல்லை
பொலிவே இங்குப் பொங்குது பார்!
ஊழிதோ றூழி உன்னுடன் பேச
பூதங்கள் எங்கும் காப்பன பாராய்!
வேதனை இல்லை; விசனமும் இல்லை
உருளும் கல்லில் பாசம் பிடிப்பதிலை
அடிபடு தொடர்ந்தெழு
விழுந்தபின் மீண்டெழு
முடிபடு இடம் விழு
முழித்தபின் நடந்திடு
பொடிபடும் புவனங்கள்
புறப்படும் பொடிபடும்
எடுபடும் இடைவிழும்
முடிவினில் முதலெழும்
தொடர்ந்திடு தொடர்ந்திடு
தொல்லுல கெங்கணும்

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்று
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்றும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்று
கடல் ஞாலம் அளந்தேனும் யானே என்றும்
செல் செல்
செல் செல்
செல்லும் வழியெலாம்
சிந்தை பதியச்
செல் செல்
செல் செல் செல்.

இதுபோல் எத்தனையோ சிந்தைக் கொப்புளிக்க என் முதல் சைக்கிள் சஃபாரி. பின்னர் திக்கு திசையில்லாத ஒரு பயணம். திருநீர்மலைக்குப் பின் புறம் உள்ள வயல் வெளிகளின் பாட்டைகளில் விட்டுக்கொண்டு போன போக்கில். அப்பாடி.. என்ன இயற்கை...எத்தனை விதமான காற்று? ஒளியில் எவ்வளவு பேதம்? ஒலிகளின் ஓடிப்பிடித்து விளையாட்டு எவ்வளவு? சைக்கிளிங் செய்பவரை இயற்கையெல்லாம் காதலிக்கிறது. ஆனால் இந்தப் பாழாய்ப்போன பெட்ர்ரோலின் அடிமையாகி விரைவோரை பஞ்ச பூதங்களும் சபிக்கின்றன. -- இது நான் சொல்லும் முட்டாள்தனங்களில் ஒன்று.

பிறகு பலமுறை ஸ்ரீபெரும்பூதூருக்குப் பயணம். மெயின் சாலையை விட்டுவிட்டு பக்கச் சாலைகளில் நழுவல். இந்த நழுவலுக்கு சைக்கிளிங்கை விட்டால் வேறு சிறந்த வாகனம் இல்லை. ஒரு சைக்கிள் கடைக்காரரிடம் உட்கார்ந்து ஒரு வாரம் ட்ரெய்னிங். எப்படி எப்படி சைக்கிள் பிரச்சனைகளைச் சமாளிப்பது என்று. திடுதிப்பென எங்கோ ஊருக்கு ஊர் பெரும் வழி நடுவே சைக்கிள் நின்றால். பஞ்சர் என்றால் எப்படி வெகு விரைவில் கழட்டி ஒட்டி மாட்டி மீண்டும் சுழல்வது? இது போய்க்கொண்டே இருக்கும் ......ஏகப்பட்ட விஷயம் இருக்கு. சைக்கிள் என்றால் எது சைக்கிள்? சும்மா அந்தக் காலத்து சைக்கிள் அதெல்லாம் சைக்கிளோடேயே சேர்த்தி இல்லை. சைக்கிள். நிமிர்ந்து விரைப்பா முதுகு தண்டு கோணாம போற மாடல் சைக்கிள் மிகவும் கெடுதி. சைக்கிள் சாஸ்திரத்திற்கே விரோதமானது. சரி அப்படின்னா எப்படி இருக்கணும் சைக்கிள்? சைக்கிள் வாங்கணும்னா எதை எதைப் பார்க்கணும்? என்ன கண்டிஷன் இருக்கணும்?
அத்தனை லிட்ரச்சரையும் வாங்கி மேய்ஞ்சேன் ஒரு காலத்துல.

அத்தோட விட்டேனா? நேர போய் சைக்கிளிஸ்ட் அஸோஸியேஷன் ஆஃப் இந்தியா தில்லிக்கு எழுதி மெம்பர்ஷிப் சேர்ந்தேன். அவங்க சென்னையிலயே ஒரு கிளையை சொல்லி அங்க போய் மெம்பர் ஆகச் சொன்னாங்க. போய் மெம்பர் ஆனேன். அப்ப ப்ளான் என்னன்னா அனைத்துத் தமிழகச் சைக்கிள் யாத்ரா நான் மட்டும் போவதற்குத் திட்டம். நடுவில் மடக்கி யாராவது கேட்டா சொல்றதுக்கு வேணுமே அதற்குத்தான் இது. சரி ஒவ்வொருத்தருக்கு ஏதோ ஒரு பைத்தியம். எனக்கு மட்டும் அப்பப்ப என்ன பைத்தியம் பிடிக்குதுன்னே சொல்லமுடியல்ல. சரி என்ன பைத்தியம் பிடிச்சா என்ன? பித்தா பிறை சூடின்னு சூடிக்கொண்டால் போகிறது. சூடி நமக்கு நாமே கொடுத்துக் கொண்டால் சுடர்க்கொடி அருளாமலா போகும்? பரந்த வானும், புலர்ந்த மண்ணும் படர ஒரே வழி சைக்கிள்.

***

No comments:

Post a Comment