Monday, December 30, 2019

கூவுதல் வருதல்

சின்ன குழந்தைகள் பளீர் பளீர் என்று பேசும் அழகு பார்ப்பதற்கே தெய்விகம். அதுவும் தாயாரே உருவெடுத்து வந்தது போல் பெண் குழந்தைகள் பேசும் போது சாக்ஷாத் அன்னைதான் பேசுகிறாள் என்று தோன்றும்.

அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும் எம்பெருமானார்க்கு! திருப்புளிங்குடி திவ்ய தேசத்தில் சேவித்து அந்தத் தெரு மூலையில் ஒரு சின்ன பெண்குழந்தை வரவும், அந்தக் குழந்தையிடம், ‘குழந்தாய்! இங்கிருந்து ஆழ்வார் திருகரி எத்தனை தூரம் இருக்கும்?’ என்று பேச்சு கொடுக்க, அந்தக் குழந்தை, அர்ச்சகரின் குமாரி, கணீர் என்று,

’கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
இடர்கெட அசுரர்கட்கு இடர்செய்
கடுவினை நஞ்சே! என்னுடை அமுதே!
கலிவயல் திருப்புளிங் குடியாய்!
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க, நீ ஒரு நாள்
கூவுதல் வருதல் செய்யாயே.’

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைப் பதிலாகச் சொல்லியது. குழந்தை பாசுரம் சொல்லும் நேர்த்தியிலும், பிஞ்சுக் குரலின் பைம்பொழிவிலும் அதிசயித்து நின்றார் உடையவர். அந்தக் குழந்தையோ, ‘ஜீயரே! இந்தப் பாசுரம் பாடம் இல்லையா?’ என்று கேட்டதும் பெரிதும் மகிழ்ந்து அந்தக் குழந்தையைக் கொண்டாடி ஆசீர்வதித்தார் எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜர். அந்தக் குழந்தை பதில் சொன்ன குறிப்பு என்னவென்றால் ‘கூவுதல் வருதல்’ என்று ஆழ்வார் திருப்புளிங்குடி எம்பெருமானைப் பாடுகிறாரே! அப்படியென்றால் திருப்புளிங்குடியிலிருந்து ஆழ்வார் திருநகரி கூப்பிடு தூரம்தானே. இது அந்தப் பாசுரம் சந்தையாயிருந்தால் அதிலேயே தெரியுமே என்பதாகும். நம்மாழ்வார் மீது குழந்தையிலிருந்து அனைவருக்கும் இருந்த பக்தியைக் கண்டு நெகிழ்ந்து போயிருப்பார் உடையவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

***

No comments:

Post a Comment