Friday, December 27, 2019

மங்களாசாஸனம்

மங்களாசாஸனபரை: (மங்களாசாஸனமே தம் நியதியாய்க் கொண்டோர்)-- என்கிறது ஸ்ரீவெங்கடேச மங்களாசாஸனம்.

மங்களாசாஸன பரைர்
மத் ஆசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைர் ஆசார்யை:
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

மங்களத்தை ஆசாஸிக்கை (நலம் திகழ் நிலையே நிலைக்க நெஞ்சுருகுதல்) என்பது எப்படி
ஒரு ஜீவனின் இயல்புக்குச் சேரும்? இவனோ சிறியன், அணுப்ராயத்தன், சுருக்கம், விரிவு ஆகிய விகாரங்களுக்கு உட்பட்ட அறிவை உடையவன். இருள் துயக்கு மயக்கு ஆகிய குற்றங்களுக்கு ஆட்படுபவன். இவன் எப்படி அந்த ஸர்வஸ்மாத்பரனின் நலம் திகழ் நிலை நிலைக்க வேண்டுமே என்று நெஞ்சம் பரிவனாய் ஆகி நிற்றல் முடியும்? ஏதோ வாய்க்குச் சமத்காரமாக சொல்வதாய் இருக்கலாமே ஒழிய உண்மையில் எப்படி ஒட்டும்? இந்தக் கேள்வி நம் மனத்தில் எழலாம். காரணம் இந்த மங்களாசாஸனம் என்பதோ, பிரபத்தி என்பதோ வெறும் வித்வத்துக்கு மட்டும் புலனாகும் அர்த்தங்கள் அல்ல. ஆத்ம ஞானம் புலரத் தொடங்கிய பின்னர்தான் இந்தக் கருத்துகள் புரியும். இவை புரியத் தொடங்கிய பின்பு மற்றைய கருத்துகளில் ருசி இருக்காது.

ஆன்மாவின் இயல்பு சேஷத்வம். சேஷம் சேஷம் என்றால் என்ன? எது ஒன்று தான் சார்ந்த ஒன்றிற்கு அதிசயத்தை விளைக்கிறதோ அது அந்த மூலத்துக்குச் சேஷம். இந்த சேஷ வஸ்துவால் விளையும் அதிசயத்தைப் பெற்று விளங்குவது சேஷி. சேஷம் ஜீவன்; சேஷி பரம்பொருள். பரம்பொருளுக்கு அனைத்து அதிசயமும் தன் இச்சை, ஞானம், கர்மம் ஆகியவற்றால் விளையும்படி இருக்கை ஆத்மனின் இயல்பு. அதிசயம் என்பது சிறப்பு. எனவே தம் ஆத்ம இயல்பை உணர்ந்தோர், தம் சேஷத்வத்தில் நிலை நிற்பர். சேஷத்வ ஞானம் தலையெடுத்த ஜீவனுக்கு பகவானுக்கு அனைத்துச் சிறப்புகளும், நன்மைகளும் ஏற்படவேண்டும்; அவன் சிறப்புகளுக்கு எவ்வித இடையூறும் விளையலாகாது என்று நெஞ்சு உளுக்கி நிற்றல் அல்லது வேறு என்ன இயல்பான மன நிலையாக இருக்கமுடியும்? இவன் அவனைக் காக்கின்றானா என்பது அல்ல பேச்சு. இவனுடைய ஆத்மஞானத்தால் இவனுக்கு விளையும் பாவ பரிபாகம். இடமல்லாத இடத்தில் பயத்திற்கு ஓரிடம் ஏற்படுகிறது. இந்த ஜீவனின் பக்தி பிரபாவத்தால் விளையுமதான அஸ்தானே பயசங்கை (அஸ்தானே -- இடமல்லாவிடத்தில்; பயசங்கை -- அச்சமுடன் ஐயுறல்) என்பதுதான் இந்த மங்களாசாஸனத்துக்கு அடிப்படை. இந்த மங்களாசாஸனமே ஓர் உருவாகத் திகழ்ந்தவர்தான் பெரியாழ்வார்.

அதாவது உலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு ஜீவன், தான், தன்னுடைய வெற்றி, தன்னுடைய வாழ்வு, தன்னுடைய பாதுகாப்பு என்ற வெறியுடன் இயங்குகிறது. இதே ’தான் பற்றிய வெறி’தான் கடைசியில் மங்களாசாஸனம் என்னும் நிலைக்கு அதே ஜீவன் பரிபக்குவப்பட்டு வந்து நிற்கும் பொழுதும் வெளிப்படுகிறது. என்ன வித்யாசம்? தான் யார் என்ற self-definition நன்கு தெளிவடைந்துவிட்டது. அவ்வளவுதான். இந்த உடலும், மனமும் சுமந்த இந்தப் பெண்ணோ, ஆணோதான் தான் என்னும் உணர்வு கழண்டு, தான் உண்மையில் ஆத்மா, ஆத்மாவாகிய தான் தனக்குள் உள்ளுயிராய் விளங்கும் பரமாத்வாவிற்கு உடலாக இருக்கின்றோம், சரீரமாக இருக்கின்றோம் என்ற தன்னுணர்வு தெளிந்து எழுந்துவிடுகிறது. பிறகு உலகம் முழுவதும் அவன் உடலாய் விளங்கும் காட்சி புலப்படுகிறது. அப்படிப் புலப்படுங்கால் இந்த உலகம், தான், பிறர் என்ற வேறுபாடின்றி அனைத்தும் அவனுடைய சரீரமாகத் திகழ, அவன் ஒருவனே முழுமுதல் ஒருவனாய்த் திகழ்கிறான். தனியே உலகம் என்று ஒன்றும் இல்லை. தனியே தானும் பிறரும் இல்லை. அவனன்றித் தனியே உயிர்கள் இல்லை. இருப்பது அந்த ஒரே தத்துவமான பரமாத்மா. அவனுடைய திருமேனியாகத்தான் இந்த ஆத்மா விளங்குகிறது. அவனுடைய திருமேனியாகத்தான் இந்த ப்ரபஞ்சமே விளங்குகிறது. இந்தப் பக்குவத்திற்கு வந்து விட்ட ஜீவன் தன்னுடைய அகம் நெகிழ, உள்ளம் கரைந்து வேண்டுவதெல்லாம் அந்த ஏக தத்துவம், அனைத்தையும் சரீரமாகக் கொண்டு தான் அனைத்துக்கும் உள்ளுயிராய் விளங்கும் அந்தப் பரமாத்வானது என்றும் பொலிந்திட வேண்டும், என்றும் விளங்கித் திகழ வேண்டும், என்றும் இவ்வண்ணமே ஒளிர்ந்து, சுடர்ந்து ஓங்க வேண்டும், பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு நீடூழி வாழ வேண்டும் என்றுதான்.

அந்த உயர்ந்த பாவம், உயர்ந்த உள்ளச் சிறப்பு அதைத்தான் மங்களாசாஸனம் (மங்களத்தை ஆசாஸிக்கை - இறைவனுக்கு நன்மையை வேண்டி விழைவது) என்ற பதம் உணர்த்துகிறது. கடைசியில் உயர்ந்த பரிபக்குவத்தில் ஜீவனுக்கு இயல்பாக வாய்க்கும் உள்ள உயர்வை ஆரம்பக் கட்டத்திலேயே ஆத்மிகப் பயணத்தில் முனையும் ஜீவனுக்கு அனுஷ்டானமாகவும், சடங்காகவும், தொழுகையாகவும் ஆக்கிவைத்தால் அந்த ஜீவனின் ஆன்மிக முன்னேற்றம் இன்னும் சுலபமாக வாய்க்கும் என்ற காரணத்தினால் நம் ஆழ்வார்களும், ஆசாரியர்களும் இவ்வண்ணம் கோயில் வழிபாட்டிலேயே அதை அமைத்துவைத்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.

'கோயிலுக்குப் போகலாம் வா' என்றார்கள் நண்பர்கள். 'போகலாமே' என்று சொல்வதற்குள் நண்பர்களில் ஒருவர், 'ஏய்! இவங்கள்ளாம் கோயிலுக்குச் சாமி கும்பிட போக மாட்டாங்கடா! நாமெல்லாம் போயி ஏதாவது வேண்டிப்பமில்ல இவங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்குப் போனா சாமி நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணிவிட்டு வருவார்கள்.'

நண்பர்கள் கொல்லென்று சிரித்துவிட்டனர். எனக்குச் சிந்தனை வயமாகிவிட்டது. ’உண்மைதான். நமது பெரியவர்கள் என்ன சொல்லிவைத்திருக்கிறார்கள்? கோயிலுக்குப் போதல் என்றாலே அந்த திவ்ய தேசத்தைச் சென்று ஸேவித்து மங்களாசாஸனம் செய்கை. அதெல்லாம் ஆழ்வார் போனால்தானே. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் போனால் எங்கே மங்களாசாஸனம்? ஆனால் சாதாரண மனிதர்கள் என்று நம்மை நாம் எங்கே பிரித்துக்கொண்டு நகருவது? அனைத்தும் அவன் உடைமை என்பதை இசைந்தால்தானே ஸ்ரீவைஷ்ணவம் என்பதைப் பற்றிப் பேச்சு. ஆனால் நாம் போய் நின்று 'பெருமாளே! நீர் நன்றாக இருக்க வேண்டும். உமது திவ்ய ஆஸ்தானம் என்றும் மங்களம் பொலிக.' இப்படியா நினைக்கிறோம்.? 'பெருமாளே! நீர் மிக உயர்ந்தவர், மிகச் சிறந்தவர் என்பது எனக்குத் தெரியும். நானோ ஒரு சிறு ஜீவன். எனக்கு அருள் புரியும்' என்றுதானே நினைக்கிறோம்.'

ஒரு ஜீவன் தன் நிலையை உணர்ந்தால் உறக்கம் கெடும். உணவு செல்லாது. ஒரு நெடிய துக்கம் மட்டுமே அந்த ஜீவனை ஆட்கொள்ளும். அப்படி இருக்கும் ஜீவன் கடவுளிடம் தன் துர்க்கதியைச் சொல்லிக் குறையழுது நிற்றலே இயல்பு. எத்தகைய மனோநிலை அல்லது ஆன்மிக பரிபாகம் வாய்த்தால் ஒரு ஜீவனைத் தன் நிலைபற்றிய அச்சம் அனைத்தும் நீங்கப் பெற்றதுவாய், அத்துடன் நில்லாமல் முழுமுதலுக்கே குறைவற்ற மங்களத்தைத் திருவுள்ளம் பற்றும் பெருந்தகைமை வாய்த்ததுவாய் ஆக்கும்? 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்று பெரியாழ்வார் இதையே திவ்ய பிரபந்தத்திற்கெல்லாம் ஓம்காரமாக ஆக்கிவைத்தார். இந்தப் பெருந்தகைமையே ஒரு வடிவு கொண்டாலொப்பத் திகழ்ந்த காரணத்தால் பெரிய ஆழ்வார் ஆனார்.

மங்களா சாஸனம் என்பது ஏதோ எம்பெருமானைப் பார்த்து வாழ்க வாழ்க என்று சொல்லிப் போவது மட்டுன்று. பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுதல் என்றால் அந்த திவ்ய தேசம், அதை ஒட்டி அமர்ந்த அடியார் குழாங்கள், கோயிலைச் சார்ந்த கைங்கர்யங்கள் என்றபடி அனைத்தும் நல்ல நிலையில் சீரும் சிறப்புமாக விளங்க வேண்டும் என்று ஆசைப் படுவதுதான் மங்களாசாஸனம். கோயில் அலகிடுதல் என்பது தொடங்கி, கோயிலைச் சார்ந்த சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்த அக்கறை என்னும்படி அனைத்தும் திருப்பல்லாண்டு என்பதில் சேரும்.' ---

என்னடா? நாங்க சொன்னதுக்குக் கோவித்துக்கொண்டு விட்டாயா? நாங்க ஏதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொன்னோமா? -- என்று கேட்க ஆரம்பித்தனர் நண்பர்கள்.

நான் - 'இல்லையப்பா. மிகச் சிறந்த ஒரு மனோபாவத்தை நம் முன்னோர் எப்படி எப்படியெல்லாம் நம் வாயிலும், வழக்கிலும் வரும்வகை நாடி, மொழியாகவும், முன்னோர் மொழிந்த முறையாகவும், பின்னானார் வணங்கும் சோதியாகவும் தந்துவிட்டுப் போயிருக்கின்றனர் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்'

’நின் சேவடி செவ்வி திருக்காப்பு’

***

No comments:

Post a Comment