Monday, December 30, 2019

நாமஜபம் சிறந்த தர்மம்

பிரஸ்தான திரயம் என்னும் உபநிஷதங்கள், கீதை, ப்ரஹ்ம சூத்திரம் என்னும் மூன்று பிரமாண நூல்களின் கருத்துகளும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆயிர நாமங்களில் கிடைக்கும் என்பதே சாரமான கருத்து. தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம், அதிகதமமான தர்மம் உங்கள் கருத்தின்படி என்ன? என்று கேட்டான் தருமன் பீஷ்மனை. பீஷ்மனும் சூக்ஷ்மமாகச் செய்தியை உரைக்கின்றான்.

"அப்பா! உலகில் ஆகமங்கள் பல இருக்கின்றன. ஆகமம் என்றால் கடவுள் இன்னார் என்று சொல்லி அவரை அடைய வழிகாட்டும் மார்க்கம். ஆகமங்கள் எல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்று நீ அறிவாயா? நீ அத்தனை ஆகமங்களையும் ஒன்றுவிடாமல் நன்கு படித்துப் பரிட்சை கொடுத்துத் தேறி மஹாவித்வானாக இருக்க வேண்டும் ஆகம சித்தாந்தங்களில் என்பது அவற்றின் நோக்கமன்று தருமா! ஆகமங்களுக்கு நோக்கம் நீ அதை வாழ்க்கையில் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பதுதான். நீ அதை ஆசரிப்பதில்தான் அந்த ஆகமங்கள் இருக்கின்றன. வாய் வார்த்தைகளில், பக்கம் பக்கமாக எழுதுவதில், பெரும் புத்தகங்கள் எழுதிப் படித்துக் குவிப்பதில் இல்லையப்பா உண்மையில் ஆகமங்கள். நீ அதன்படி ஒழுகுகின்றாய் என்ற அந்த ஒழுக்கத்தில்தான் எந்த தர்மமும் நன்கு வெளிப்பட்டு நிலைபெறுகிறது. ஒன்று தர்மம் என்று எப்படி ஆகும்? எது உன்னை உடனே தன்னைக் கைக்கொண்டு ஒழுகும்படிச் செய்யுமோ அதுதான் தர்மத்தின் லக்ஷணம். அப்படிச் செய்யாத தர்மம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்ற அளவில்தான் நிற்கும். ஒருவரை ஒரு வாக்கியத்தின் மூலம் ஒரு கட்டளையைச் சொல்லி அதன்படி நடக்க வைக்க மூன்று விதங்களில் முடியும் என்கிறது காவிய சாத்திரங்கள்.

"ஒன்று ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு இடித்துச் சொல்லி அறிவுறுத்திச் செய்ய வைப்பதுபோல் செய்யலாம். அப்படிச் செய்தால் அந்த மாதிரியான நூலுக்கு மித்ர ஸம்ஹிதை, என்று பெயர்.

"சில நூல்கள் பல இனிய கதைகள், கவிதைகள் எல்லாம் சொல்லி சிந்தையைக் கொள்ளை கொண்டு அழகுடன் சேர்த்து இன்ன விதத்தில் இருக்க வேண்டும் என்று கனிவுடன் கூறிச் செய்ய வைக்கின்றன. அந்த நூல்களுக்கு 'காந்தா ஸம்ஹிதை' என்று பெயர்.

"சில நூல்கள் எந்த வித ஆடம்பரமுமின்றி இன்னது செய்ய வேண்டும், இன்னது தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடச் சுருக்கமாக நேரே தைக்கும் வண்ணம் உரைக்கின்றன. அதைப் படிக்கின்ற எவரும் முதல் காரியம் அதைச் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்று செயலில் ஈடுபடுகின்றனர். அதாவது ஒரு பிரபு கட்டளை பிறப்பித்தால் அவரிடம் வேலை செய்வோர் அந்தக் கட்டளைகளைச் செயலாக்குவது தம் தலையாய கடன் என்ற பொறுப்புணர்ச்சியில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட நூல்களை 'பிரபு ஸம்ஹிதை' என்று சொல்வார்கள். அத்தகைய பிரபு ஸம்ஹிதை போன்று நம்மை உடனே ஏற்று அனுஷ்டானம் செய்ய எது தூண்டுமோ அவைதான் தர்மங்கள். அப்படிப்பார்த்தால் எவைதான் தர்மங்கள்? யார்தான் எந்தத் தர்மங்களை ஏற்று எங்கு செய்கின்றனர்? என்று நினக்கிறாயா? இந்த லக்ஷணங்கள் எந்த தர்மங்களில் பொருந்தி இருக்கிறதோ அதுதான் தர்மங்களில் எல்லாம் சிறந்த தர்மம்.

பகவந் நாமங்கள் என்ற தர்மத்தை யோசித்துப் பார். இந்த நாமங்கள் தாம் சாக்ஷாத் நேரடியான தர்மங்கள். இதைச் சொல் என்பதற்கும், அப்படியே இதை ஏற்று இதன்படி ஒழுகுவதாக இதைச் சொல்வதற்கும் இடையில் வித்யாசமே இல்லை. தர்மம் ஒன்று தனியாக இருக்கிறது. அதை ஏற்று அதன்படி நடத்தல் என்ற ஆசாரம் என்பது தனியாக இருக்கிறது என்பதை பகவந் நாமங்கள் விஷயத்தில் சொல்ல முடியாது. நாம ஜபம் விஷயத்தில் எது தர்மமோ அதுவேதான் ஆசாரமும். இதைச் சொல் என்பவனும் அதைச் சொல்கிறான். அதைச் சொல் என்று காதால் கேட்பவனும் அதையே அந்தக் கேட்கும் கணத்திலேயே, மனத்தால் வாங்கும் கணத்திலேயே சொல்பவனாய் ஆகிவிடுகிறான். தர்ம உபதேசமும், அந்த தர்மத்தை ஆசரிக்கிற ஆசாரமும் ஒரே கணத்தில் நடைபெறுவதை நீ பகவந் நாம ஜபம் ஆகிய இந்தச் சிறந்த தர்மம் ஒன்றில்தான் பார்க்க முடியும்.

"அப்படிப்பட்ட பகவந் நாம ஜாபம் ஆகிய தர்மத்தைவிட வேறு எந்த தர்மம் முழுக்க முழுக்க பிரபு ஸம்ஹிதை என்பதற்கு ஒவ்வியதாய் வருகிறது? யோசித்துப் பார். ஆகவே இந்த அழிவில்லாத தர்மம் ஆகிய பகவந் நாம ஜபம் என்னும் தர்மத்திற்கு யார் பிரபு? பிரபு ஸம்ஹிதை என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அவ்வாறு செய்யப் பணிக்கும் ஆணைசக்தி உடைய அந்தப் பிரபு யார் என்கிறாயா? அழியாத, பொய்க்காத, மாறாத இந்தத் தர்மத்திற்கு பிரபு மாறாதவனாகிய அச்சுதன்.

ஸர்வ ஆகமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பித:|
ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:||

அனைத்து ஆகமங்களிலும் அவற்றின்படி நடப்பதே முக்கியமாக முதலில் விளக்கப்படுவது ஆகும். அவ்வாறு நடக்கும் ஒழுக்கமே தர்மத்தை நன்கு வெளிப்படுத்தும். (இந்த பகவந் நாம ஜபம் என்ற) தர்மத்திற்கு பிரபு அச்சுதன். எனவே நீ தர்மம் என்று கவலைப் பட்டாலும் இதைவிடச் சிறந்த தர்மம் இல்லை. தனம் என்று கவலைப் பட்டாலும் இதைவிட அருந்தனம் எதுவும் இல்லை. இன்பம் என்று கவலைகொண்டவனாய் இருந்தாலும் இதைவிடப் பேரின்பம் எது உண்டு? மோக்ஷம் என்று கவன்றால் நாமஜபம் சொன்னால் அன்றே அப்பொழுதே வீடு வீடாமே என்பது அன்றோ பக்த சமுதாயத்தின் அனுபவமாக இருப்பது.

வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகளே எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்!

ஸ்ரீபராசர பட்டர் கூறுகிறார் --

"இந்த ஸம்சாரமாகிய உலகம் பகவானின் இயல்பு முதலிய ஆன்மிக விஷயங்களில் ஏற்கனவே அறிவில்லாத ஒன்று. அதுவும் கலி காலத்தில் கேட்கவே வேண்டாம். அறியாமை இன்னும் அதிகம். அது மட்டுமில்லை. தமக்குத் தெரியாது என்ற குறைபாடே தங்கள் நெஞ்சில் சிறிதும் தோன்றாமல், தங்களை எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லத் துணிவது சாகசமே! இந்த விஷயத்தில் ஸஹஸ்ர நாமத்தை வெளியிட்ட வியாசரும், துதிக்கப்படும் ஸ்ரீமந் நாராயணனும் இப்படித் துணியும் என் அறியாமையைப் பொறுத்துக் கொள்வார்களாக!" என்ன சார்! ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லும் நாமாவளியில் அப்படி என்ன வேதாந்தம் என்று அலட்சியமோ, பொறாமையோ எதுவுமின்றி தயவு செய்து உங்கள் உள்ளத்தை உட்செலுத்திக் கேளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார் அன்றைக்கே!

உரைக்காரர்கள் நாமங்களின் எண்ணிக்கையையும், வகைகளையும் பற்றிப் பலவாறாக யோசித்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் ஆயிரம் நாமங்கள் என்பது இயல்பாக நூறு நூறாக வகைபடுத்தும் முறையைத் தந்திருக்கிறது. ஸ்ரீபராசர பட்டர் காட்டும் வகைப்பாட்டில் ஓர் அருமையான நயத்தைக் காட்டுகிறார், பாஞ்சராத்திர சித்தாந்த ரீதியாக. அதாவது ஸ்ரீபாஞ்சராத்திர சித்தாந்தம் என்பது பரமாத்மாவின் ஐந்து இறைநிலைகளைப் பற்றிப் பேசுவது. பரத்வ நிலை, வ்யூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்சை நிலை என்பன அந்த ஐந்து நிலைகள். மொத்த நாமங்களையே இந்த ஐந்து நிலைகளை வைத்து வகைபடுத்திக் காட்டுகின்றார் ஸ்ரீபட்டர். ஸ்ரீஆதிசங்கரரின் உரை அத்வைத சித்தாந்தமான ப்ரஹ்மம் என்பது சத்யம், ஜகத் என்பது மிதயை, இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே, வேறு அன்று என்ற கருத்தில் நிற்பது என்றாலும் ஸ்ரீஆதிசங்கரரின் கூற்றுப்படி, 'அந்த பிரம்மம் மாயாவிசிஷ்டமாகக் கொண்டு சகுண பிரம்மமாக இந்த ஆயிர நாமங்களுக்குப் பொருளாகிறது' என்றாலும் பல இடங்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் பக்தியிலேயே நெகிழ்ந்து போகிறார். உதாரணத்திற்கு 'நாராயண;' என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதுவது --

"நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம் என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம:' என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்' என்பது நரஸிம்ம புராணம்."

***

No comments:

Post a Comment