Monday, December 30, 2019

அழிக்காதே, பொலியச்செய் !

அழிக்காதே ! பொலியச் செய் ! மனிதன் ஓர் அழிக்கும் பிராணி போலும். எதை இவன் தொட்டாலும் அழித்துவிடுகிறான். இவன் தொடத்தொட அழிவுதான் தொடர்கிறது என்பதைத்தானே wear and tear என்பது காட்டுகிறது. இதற்குப் பதிலாக தொட்டால் அழியாது மேலும் மேலும் துலங்கும் என்று இருந்தால்! தேய்ந்த நிலையில் ஒன்று இருக்கிறது என்று கொள்வோம். மனிதன் தொடுகிறான். உடனே முன்னைவிடத் துலக்கம் அதிகமாகிறது என்றால் எப்படி இருக்கும்!

மொழியைப் பேசுகிறான். நல்ல மொழிதான். இதற்கு இன்ன ஒலி என்று அழகாக அமைந்திருக்கிறது. ஆனால் மனிதன் பேசத் தொடங்கியதும் பார்த்தால் அந்த மொழி, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைக்கு வந்து விடுகிறது. கேட்டால் corruption என்கிறான். அதாவது இலட்சிய நிலையில் இருக்கும் ஒன்று மனிதன் தொட்டால் அன்றாடம் அடிபடும் அரைகுறை நிலைக்கு வந்துவிடுகிறது. அதாவது Imperfection, Decay, Degeneration என்பதன் மாஸ்டராக இருக்கிறான் மனிதன். மைதாஸ் தொடுதல் - என்பார்கள். அது எல்லாவற்றையும் பொன்னாக்கும். ஆனால் மனிதன் தொடுதல் எல்லாவற்றையும் மண்ணாக்கும். மண்ணாக்குதல் என்றால் அழிவு உருமாற்றம் கெட்டுப் போதல் ஒரு நிலை நிற்காமை தேய்வு கெடுதல் நலிதல் பொன்றல் என்ற சுழற்சியில் ஆட்படுதல் -- இதைத்தான் குறிக்கிறது போலும். அப்பொழுது விண்ணாக்குதல் என்றால் இதற்கு நேர் எதிர்மாறோ?


நம்பிள்ளை இந்த ஜீவன் எதை எதையெல்லாம் அழிக்கின்றான் என்று ஒரு நிரலே தருகிறார். ஐயோ பாவம்! தொட்டதெல்லாம் அழிகிறது என்றால் என்ன செய்யும் இந்த ஜீவன்? ஏன் இப்படி ஆகிறது? இதை மாற்ற வழி ஏதும் கிடையாதா? இந்த ட்ரெண்டை மாற்றித் தொட்டால் வளரும் வழி ஏதேனும் கிடையாதா? மனித குலத்தில் யாரும் கண்டுபிடிக்காத மர்மம் இது. இதைத் தீர்க்கும் வழியைக் கண்டு பிடித்தவர்கள் ஒரே ஆட்கள்தாம் -- ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள்.

நம்பிள்ளை சொல்கிறார் -- ஏன் இந்த அழிவு ஏற்படுகிறது? யோசித்துப் பார். இந்த ஜீவன் தன்னை உடலுக்கு உரிய உயிராய் நினைத்துகொண்டு, இந்த சரீரத்தின் சரீரியாய்க் கருதிக்கொண்டு தானே தனக்கு ராஜா என்று கருதும் வரையில் இது இப்படித்தான் இருக்கும். ஆனால் என்று தன்னை பகவானுக்குச் சரீரம் என்று உணரத் தொடங்குகிறதோ அன்றே இந்த நிலைமை மாறிவிடுகிறது. ஏனெனில் அதுகால் இவனுள் இயங்குவது இவனில்லாமல் இவனுள் இருக்கும் பரமாத்மாவாகவே ஆகிவிடுவதால் அழிவே இலலாமல் தொட்டது துலங்குகிறது. எனவே இதுதான் சாய்ஸ் இருக்கிறதே என்கிறார் நம்பிள்ளை. என்ன?

நீ உன்னை சரீரியாக நினைத்துக் கொண்டு நான் இந்த உடலின் ஜீவன், தனிக்காட்டு ராஜா, சுதந்திரன், என்று நினைத்துக் கொண்டு அநர்த்தப்படு. அப்புறம் ஐயோ தொட்டது எல்லாம் அழிவா? மண்ணொடு மண்ணாய் மக்கிப் போன வாழ்வா? என்று நொந்து போ. இல்லையா? நீ அந்த பகவானின் சரீரம் என்பதை உணர்ந்து உஜ்ஜீவனம் அடை. என்றென்றும் குஷியாக ஹாவு ஹாவு என்று பாடிக்கொண்டு ஆநந்தமாகத் திரி. அப்புறம் உன் இஷ்டம் என்கிறார் நம்பிள்ளை. அவருடைய இந்த அருமையான திருவாக்கைப் பதிவு செய்கிறது வார்த்தாமாலை.

"ரக்ஷகத்வத்தை அழித்தான்; சேஷத்வத்தை அழித்தான்; பரத்வத்தை அழித்தான்; விக்ரஹத்தை அழித்தான்; அருளை அழித்தான்; அடியாரை அழித்தான்; விபூதியை அழித்தான்; பந்தத்தை அழித்தான்; வ்ருத்தியை அழித்தான்;

தன்னைச் சரீரியாக ப்ரதிபத்தி பண்ணி அநர்த்தப் படுதல் ~
தன்னைச் சரீரமாக ப்ரதிபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல் செய்யுமத்தனை --

என்று பிள்ளையருளிச் செய்தார்."

***

No comments:

Post a Comment