Saturday, December 14, 2019

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

கவிதைகளில் பெரும்பாலும் ஒரு சொற்றொடர் ஈர்ப்பெல்லாம் கொண்டு விளங்கும். படித்தபின் மனம் அதைச் சுற்றியே வரும். வெறும் நேரத்திலும் வாய் அதை அசை போடும். சங்கப்பாடல்களில் அத்தகைய சொற்றொடர்களையே அந்தப் பாடல்களுக்குப் பெயராக வைத்திருக்கின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் முதல் பாட்டு. அதில் அத்தகைய ஒரு சொற்றொடர். பாட்டு என்னவென்றால்

வாடினேன், வாடி...
வருந்தினேன் மனத்தால்..
பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி ஓடினேன். ஓடி.....
உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம்
தெரிந்து, நாடினேன்
நாடி, நான்
கண்டு கொண்டேன் நாராயணா என்னும்
நாமம்.

இந்தப் பாட்டில் 'உணர்வெனும் பெரும்பதம்' மிக ஆழமான சொற்றொடர். உணர்வு என்னும் பெரிய பதம்-- இந்த இடத்தில் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை காட்டுகின்ற பொருள் மிக அருமையானது.

உணர்வைப் பெரும்பதம் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் சொன்னால் அஃது அருட்பதம் அன்றோ! இங்கு பதம் என்றால் சொல். பெரும்பதம் என்பதில் பதம் என்றால் உலகம், ஸ்தாநம், நிலை என்று பொருள். அவ்வாறு ஆழ்வார் சொன்னதற்குப் பிரமாணம் இருக்கிறது என்று காட்டுகிறார் ஸ்ரீபெரியாவாச்சான்பிள்ளை அவர்கள். அவர் காட்டுகின்ற மேற்கோள் ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் 11வது ஸ்லோகம் ’விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாநமார்ஜிதம்’

ப்ராப்தம் என்றால் அயத்ந லப்தம் தானாகவே முயற்சியின்றி கிடைத்தது என்று பொருள். விஜ்ஞானமாகிய இந்த உணர்வு முயற்சியின்றி தானே கிட்டுகின்ற ஒரு ஸ்தாநம், ஒரு நிலை; இந்த உணர்வால் வேறு ஒன்று அடையப்படவேண்டியது என்று இல்லாமல் இந்த உணர்வே சென்றடைய வேண்டிய பெருநிலை. சென்றடையும் வரை உணர்வு இல்லாமலா இருக்கிறோம்? அஃதன்று. தானே கிட்டவேண்டிய ஒரு நிலையை முயற்சியால் சாதிக்க நினைப்பது, தானே பெரும்பயனான ஒன்றை மற்றொன்றை அடையும் சாதனமாக நினைத்தல், இவை நீங்கி உணர்வை உள்ளபடியே உணர்வது, அதுவே 'தெரிந்து' என்பது.

ப்ராப்தம் என்றால் நாம் யத்நம் செய்யாமல் தானே லபிப்பது என்று பார்த்தோமா? அது எதைப் போல் என்றால் அதற்கு அரும்பத உரைக்காரர் மிக அழகான ஓர் உதாரணம் காட்டுகிறார். ஒருவன் கங்கைக்குப் போய் புண்ணிய முழுக்காட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் நோயில் படுத்து பாயோடு கிடப்பு. என்ன செய்வான் பாவம் ஏங்குகிறான். கூட்டிச் செல்வார் யாருமில்லை. கூட நிற்பார் ஒருவரில்லை. அப்பொழுது ஒரு நாள் கங்கையில் வெள்ளம் புரண்டு அவன் கிடக்கின்ற பாயோடு அவனை வந்து தாலாட்டுகிறது கங்கை அம் நீர்! இப்பொழுது அவனுக்குக் கிடைத்த கங்கா ஸ்நாநம் யத்ந லப்தமா? இல்லை. அயத்ந லப்தம். அதாவது அவனுக்கு ப்ராப்தம். கிடைத்தது.

இப்பொழுது நாம் முன்னரே பார்த்த உபநிஷத மந்திரத்தை நினைவு படுத்திப் பாருங்கள் --

யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேந லப்ய:
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்

யார் இதை வேட்கின்றாரோ அவரால் இஃது அடையப்படுகிறது. அவருக்கு இந்த ஆத்மா தன் தரிசனத்தைத் தானே வழங்குகிறது.

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து.

***

No comments:

Post a Comment