Friday, December 27, 2019

அப்பொழுதைக்கு இப்பொழுதே

கோயிலுக்குப் போகிறோம். நமக்கோ இப்பொழுதைக்கு ஆன்மிகம், தெய்விகம், மெய்ஞானம் எல்லாம் என்னத்துக்கு என்று அதன் முக்கியத்துவம் புரியவில்லை. அதற்குப் பதிலாக உலகியல் ஆர்வங்கள் வேறு இங்கே வா என்று இழுக்கின்றன. இருக்கவே இருக்கிறது ஏகப்பட்ட கவலைகள். உடனே கவனம் செலுத்த வேண்டிய வேலைகள். ஏதோ பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று போகலாம். ஆனால் நமக்குள் ஒரு சின்ஸியர் பேர்வழி இருந்துகொண்டு குரல் கொடுக்கிறார். ‘உனக்கு உண்மையில் அதில் ஆர்வம் இல்லை என்றால் நீ ஏன் போகிறாய்? உனக்கு உண்மையாய் இரு’ என்று. நாமும் என்ன நினைக்கிறோம், ‘சரி கடவுள் விஷயத்திலாவது நாம் உண்மையாய் நடந்து கொள்ள வேண்டாமா? என்று காத்திருப்பவர்களைப் பார்த்து, ‘இல்லை நீங்க போங்க நான் வரவில்லை’ என்று சொல்லி விடுகிறோம். அப்புறம் நமக்கே தோன்றுகிறது. ஏன் அப்படிச் சொன்னோம்? எல்லாமே நமக்குப் புரிந்து, நாம் ஆர்வம் கொண்டால்தான் செய்கிறோமா? ஆபீஸ் வேலையே எடுத்துக் கொள்வோமே. கடமை என்று செய்வதில்லையா? அதுவே பின்னர் அப்பாடா நல்ல வேளை இதைக் காலத்தில் செய்து வைத்தோம். இப்பொழுது எவ்வளவு உதவியாய் இருக்கிறது! என்று மகிழ்வதில்லையா? அதுபோல் தெய்விக விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வரும்பொழுது நமக்குச் செய்யும் சக்தி இல்லாது போனால் அப்பொழுது நாம்தானே வருந்த வேண்டிவரும். அப்பொழுதே திருப்பாவை முப்பது பாட்டையாவது மனப்பாடம் செய்திருக்கக் கூடாதா? அவ்வளவு கூப்பிட்டார்களே அந்த ஸ்தோத்திரபாட கோஷ்டிக்காகவாவது போய் வெறுமனே சொல்வதைத் திரும்பச் சொல்லிவந்தாலே இப்பொழுது நமக்குச் சில ஸ்தோத்திரங்களாவது மனப்பாடம் ஆகியிருக்குமே! - இப்படி நினைத்து ஏங்கும் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் கண் தெரியாது, காது மந்தம், கால் தள்ளாடும். ஆனால் கொடுமை அப்பொழுது என்று பார்த்து வாழ்க்கையில் புரியாதது எல்லாம் புரிய ஆரம்பிக்கும். அதுவும் தெய்விகம், ஆன்மிகம் எல்லாம் இந்த விஷயத்தில் மிகவும் படுத்தும். மரணம் வாசலில் காத்திருக்கும் போதுதான் முண்டகோபநிஷத்து நன்றாகப் புரிவதுபோல் தோன்றும். அதில் மிகுந்த ஆசையும் அப்பொழுதுதான் ஏற்படும். இரு நான் படித்துவிட்டு வருகிறேன் என்றால் எவ்வளவு கத்தினாலும் காது கேக்காது. இந்த மாதிரி வாழ்வியல் கஷ்டங்கள் எல்லாம் உண்டுதான் என்று தெரியாதா ஸ்ரீபராசர பட்டருக்கு. அவர் இதற்குச் சொல்லும் வழிதான் நமக்குக் கைகண்ட வழி.

ஸ்ரீபராசர பட்டர் சொல்வது - கோயிலுக்குப் போவது, பகவத் கிரந்தங்களை வாசிப்பது, கேட்பது இதெல்லாம் ஒருவர் ஆர்வம் இல்லை என்று தோன்றினாலும் ஒரு அனுஷ்டானம், ஒரு நியமம் என்று, பொய்யாகப் பண்ணுவது போல் உள்ளம் சிணுங்கினாலும் கூட, செய்து கொண்டு வருவது நல்லதுதானாம். ஏனெனில் கடைசி காலத்தில் உதவி செய்யும் என்கிறார்.

"நம்பி திருவழுதிவளநாடு தாஸர்க்கும், பிள்ளை திருநறையூர் அரையருக்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை:- உகந்தருளின நிலங்களிலே பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டுத் திரியவமையும்; அந்திம தசையிலே கார்யகரமாம்."

உகந்தருளின நிலங்கள் - கோயில்கள், அவர்களுக்கா சொல்கிறார்? எல்லாம் எனக்காக வேண்டியல்லவா?

***

No comments:

Post a Comment