Wednesday, December 25, 2019

தமிழ்ப் புலவர் போற்றும் நம்மாழ்வார்

ஔவை வாக்காக ஒரு பாடலைப் பெருந்தொகை கூறுகிறது. (பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936) 

ஔவை வாக்கு --

ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத் -- தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியா னிவ்வுலகின்
தாய்மொழிய தென்பேன் றகைந்து.

இவ்வாறு பாடுகின்ற இந்த ஔவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நன்கு ஊறிய கல்வி உடையவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் வேதாந்தப் பரிச்சயம் மட்டுமின்றி, வேதாந்த தாத்பர்யம் என்ன என்று முனைவோருக்குத்தான் ஐம்பொருள் என்னும் கருத்து நினைவில் நிற்கும். 

ஐம்பொருள் என்பது அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படுவது.

மிக்க இறைநிலை -- ப்ரஹ்ம ஸ்வரூபம்;
மெய்யாம் உயிர் நிலை -- ஜீவாத்ம ஸ்வரூபம்;
தக்க நெறி -- முக்திப் பெருநிலைக்கு ஏற்ற வழியான ஹிதம்;
ஊழ்வினை -- முக்தி மார்க்கத்தில் தடையாக இருக்கும் விரோதி ஸ்வரூபம்;
வாழ்வினை -- பரமபுருஷார்த்தமான பெரும் பேறு.

மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.

என்பது பராசர பட்டரின் திருவாய்மொழிக்கான தனியன்களில் ஒன்று. இந்த ஐந்து அர்த்தங்களை ஓதும் திருவாய்மொழி யாழினிசை வேதம் என்று சொல்லப்படுவதான சாம வேதத்தைச் சேர்ந்ததான சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை முழுதும் உள்ளடக்கியது என்பதால் திருவாய்மொழியை சாமவேத சாரமானது என்னும் மரபைப் பதியவிடுகிறார் பராசர பட்டர். அஃது நெடுநாளைய மரபு என்பதை ஔவையின் வாக்கு உணர்த்துகிறது.

நாற்பொருள் -- நான்கு புருஷார்த்தங்கள், அறம், பொருள், காமம், வீடு.
முப்பொருள் -- சித், அசித், ஈச்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம்.

ஆக ஐம்பொருள், நாற்பொருள், முப்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைத் தன்னகத்தே பொதிந்து கொண்டதான செம்பொருள் -- ஸாரதமமாகிய அர்த்தம் என்பது வெறுமனே மேலெழுந்தவாரியாக வேதங்களைக் கற்பதால் மட்டும் ஒருவர் பெறுவதற்கரிது. அதில் நீண்ட பயிற்சியும், ஆழ்ந்த சிந்தனையும், தியானமும் உடையோர்க்கே வேதமானது செம்பொருளை நீண்ட முயற்சிக்குப் பின்னர் பகவத் க்ருபையால் உணர்த்தக் கூடியது.

ஏனெனில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண இயலா பேதைகள் தன்னகத்தே உள்ள அர்த்தங்களைத் தம் மந்த மதியின் காரணமாக எங்கேனும் கலக்கிவிடுவரோ என்று வேதமே அஞ்சுகிறது என்று ரிக் வேதமே பாடுகிறது.

எனவே ஒருவர் வேதத்தின் மூலமாக மட்டும் செம்பொருளை அறிய முயல்வது சேட்பாலதான நெடுமுயற்சி, பெரும் வருத்தம். ஆனால் அந்தச் செம்பொருளை சேய்மொழி ஆகிய திருவாய்மொழி ஆரம்பம் முதல் உள்ளீடாக நூல் பரப்பெங்கும் கடைசிவரை, தெள்ளத் தெளிவாகக் காட்டிநிற்பது. ஔவையின் இந்தக் கருத்தைத்தான் பின்னால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் அருமையாகப் பாடிக்காட்டுகிறார்.

செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.

என்று. இங்கு ஔவை அற்புதமான ஒரு நயம் காட்டுகிறார். சேய்மொழி திருவாய்மொழி, தாய்மொழி எது? வேதம் என்கிறார். அது மட்டுமன்று. சிலர் திருவாய்மொழியைச் சேய் மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூறுவது என்னவெனில் திருவாய்மொழி என்பது தாய்மொழியேதான் என்பதாம். அதாவது வேதமேதான். அதாவது இங்கு சேய்மொழி என்பதை வேதார்த்தம் விளக்கும் உபப்ருஹ்மணம் மட்டுமன்று திருவாய்மொழி. தானே வேதம் என்று சொல்லத்தக்கது என்பது ஔவை காட்டும் அற்புத நயம். இந்தக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கல்வெட்டாக்கி வைத்தார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் மஹாக்ரந்தத்தில்.

'வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.'

அடுத்து இடைக்காடர் வாக்கு என்று ஒரு செய்யுளைக் காட்டுகிறது பெருந்தொகை.

இடைக்காடர் வாக்கு --

சேய்மொழியோ வாய்மொழியோ செப்பி லிரண்டுமொன்றவ்
வாய்மொழியை யாரு மறையென்ப -- வாய்மொழியால்
ஆய்மொழிகள் சால வுளவெனினு மம்மொழியின்
சாய்மொழியென் பேன்யான் றகைந்து.

இதுவும் ஔவையின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது. திருவாய்மொழியை வாய்மொழியாகிய வேதத்தின் சாய்மொழி, துணைவிளக்க நூலான உபப்ருஹ்மணம் என்று கூறுகிறார் இடைக்காடர். நம்மாழ்வாரைப் பற்றிய பெருங்களஞ்சிய நூல் உருவாகும் பொழுது தமிழகத்தின் உண்மையான ஏற்றம் எவ்வண்ணம் திகழ்ந்தது, எங்கு மையமிட்டு நின்றது என்பது தானே போதரும்.

***

No comments:

Post a Comment