Friday, December 27, 2019

கோயில்

கோயிலாகிய ஸ்ரீரங்கத்திலேயே பிறந்து, வளர்ந்து, நிலைத்த மகனீயர்கள் எத்துணையோ பேர் உண்டு. ஆனால் அத்தனை பேருக்கும் கோயில் என்பதை முன் இட்டுப் பெயர் வழக்கம் அமையவில்லை. ஆனால் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீபெரும்புதூர் வள்ளல், ஆழ்வார் திருநகரியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் போன்ற சிலருக்கோ கோயில் என்பதை இட்டு வழங்கும் சில பெயர்கள் அமைந்துள்ளன.

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

என்று ஆண்டாள் பாடுகிறாள் (நாச் திரு 9.6).

பிற்காலித்து வந்த யதிராஜராகிய உடையவர் திருமாலிருஞ்சோலை நம்பிக்குப் பெண்பிள்ளை நேர்ந்துவைத்தாள் என்று தெரிகிறதே அன்றி அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றினாளோ என்று அறியக்கூடவில்லை; எனவே அந்த நேர்த்தியை நாம் நிறைவேற்றக் கடவோம் என்று ஸ்ரீராமானுஜர் சொன்னவண்ணம் நிறைவேற்றினார். அன்று ஆண்டாள் சந்நிதியில் எழுந்த அருளப்பாடு "கோயில் அண்ணரே" என்பது. ஆண்டாள் தம்முடைய மனோரதத்தை ஓர் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றியபடியாலே ஸ்ரீராமானுஜரை அண்ணரே என்று விளித்தாள். அப்பொழுது ஸ்ரீரங்கத்து அண்ணரே என்றோ திருவரங்கத்தண்ணா என்றோ விளிக்காமல் 'கோயில் அண்ணரே' என்று விளித்தபடியால் அதுமுதல் ஸ்ரீராமானுஜருக்குக் 'கோயில் அண்ணன்' என்று திருநாமம் வழங்கத்தொடங்கியது. ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் 'கோயில் அண்ணர்' என்பது ஸ்ரீராமானுஜரைக் குறிக்கும்.

தம்முடைய ஆசார்யரின் கட்டளையால் திருவரங்கமே தம் நிலைத்த இருப்பிடமாகவும், திருவாய்மொழியைக் கற்பதும், கற்பிப்பதும், அதற்கு உண்டான உரைவளங்களைப் புகட்டும் வகையில் உரைப்பெருக்கு ஆற்றுவதுமே தம் வாழ்வின் பொழுதுபோக்காகக் கொண்டவர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். அதனாலேயே அவருக்கு கோயில் மணவாள மாமுனிகள் என்று பெயர் ஆயிற்று.

*

No comments:

Post a Comment