Tuesday, December 24, 2019

திவ்ய ப்ரபந்தத் திருநாள்

பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வது ஏதோ உபசாரமாக அன்று. ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களில் ஸ்ரீவைகுண்டம் என்பது என்ன விவரணைகளோடு அமைந்திருக்கிறதோ அதனுடைய பூலோக வடிவம் ஸ்ரீரங்கம். ஏன் ஆகமங்களில் என்னென்ன திக்பாலர்கள், அதிஷ்டான தேவதைகள், கிரியா பாதத்தின் படி என்னென்ன மூர்த்தி பேதங்கள், உற்சவாதிகளின் தாத்பர்யம் அனைத்தையும் நுணுக்கமாகப் பாரமேஸ்வர சம்ஹிதை கோவிந்தாச்சாரியார் ஸ்வாமி ஒரு காலத்தில் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

வேதாந்தத்திலும், ஆகமங்களிலும் ஜீவனின் முக்தி அடைதலைப் பற்றிய விவரணைகள் வரும். அர்ச்சிராதி கதியில் சென்று ஜீவன் முக்தியை அடைகிறான் என்பது செய்தி. அர்ச்சிஸ் என்றால் ஒளி. ஓளிமயமான வழியில் உயிரின் கடைத்தேற்றத்திற்கான பயணம் என்பது எத்தனை ஆரோக்கியமான ஒரு சித்திரம்.!

நாம் தான் எல்லாவற்றையும் 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, 60 வருவதற்கு முன்னரே, சார் கண் பிரச்சனை, ரொம்ப நேரம் படிக்க முடியலை, உட்கார்ந்தா முதுகு பிடிக்கறது, நடந்தா உடம்பு கூட வருகிறது, கால் எல்லாம் விண் விண் என்று இழுக்கிறது, அதிக நேரம் உட்கார்ந்து கேட்க முடியலை, சார் ஏதாவது நல்ல ஸத் விஷயமா காதுல விழுந்தா அப்பா என்ன சுகமா தூக்கம் வருதுங்கிறீங்க, - இப்படித்தான் நமக்குத் தத்வார்த்த ரீதியான விஷயங்களில் அக்கறையும், கொடுப்பினையும் இருந்து கொண்டிருக்கிறது.

'சார் என்ன நினைச்சிண்டு இருக்கீங்க? அதற்கெல்லாம் ஏது சார் நேரம்? வயிற்றுப் பாடே பெரும் பாடு. அது போதாதுன்னு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல், வீட்டில், ஆபீசில்.’

ஆனால் கிரிக்கட் பார்க்க இதெல்லாம் தடையாவதில்லை. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டங்களைப் பார்க்க எதுவும் தடையில்லை. இதில் எதுவும் தப்பில்லை. ஏனெனில் 'லோகோ பின்ன ருசி:' - உலகின் ருசிகள் பலவிதம். ஆயினும் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளர்விலராகில் சார்வது சதிர்' என்று போய்ப்பார்த்தால், அதுவும் மார்கழி மாதத்தில் விடியற் பொழுதின் பனிப்படலத்தில், அன்றாடம் பொங்கிய பொங்கலும், பொழியும் இசையும், வழியும் கதிரொளியுமாய் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்டமேதான் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஸ்ரீரங்கநாதனோ ஆகமங்களில் சொல்லியபடி ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக் கொண்டிருப்பான்.

மார்கழி முதல் தேதி முதல் தொடங்கும் திருப்பாவை நம்மை ஸர்வ அவஸ்தைகளினின்றும் துயிலெழத் தூண்டியபடியே இருக்கும். பகல் பத்து இராப் பத்து என்று 21 நாட்கள் மக்கள் எல்லாம் கோவிலை நோக்கிப் போவதும், அர்ஜுன மண்டபத்தில், திருமாமணி மண்டபத்தில் என்று மாறி மாறி அரங்கத்தரவின் அணையானும், அடியாரும் ஸ்ரீஆண்டாளின் பாசுரங்களைச் செவிமடுத்தபடியே எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் ஆழ்வார்களின் தெய்வத் தீந்தமிழைத் தோய்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

திவ்யசூரிகளின் உத்கீதமான தமிழை அவனுக்கு விண்ணப்பிக்கும் அரையர்களோ மகாராஜாக்கள் போல் தலையில் கிரீடம் தரித்து நின்று சொல்வார்கள். இந்த மாதிரி கோவிலில் தெய்வத்திற்குத் தமிழைச் சொல்வது என்பது நாம் விளையாட்டாகச் சொல்லி விட முடிகிறது. ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது? வேறு யார் திருமங்கை மன்னன்தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியைத் துயிலெழுப்பினாள் ஸ்ரீஆண்டாள். உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ்பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழியத் திருவோலக்கம் இருந்து நனைகின்றான்.

திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார். தம்முடைய திருவாய்மொழியைக் கேட்டு ஆரார் வானவர்கள் என்று சடகோபன் சொன்னது அவர் மனத்தில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருந்தது. நித்ய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டுத் திருப்தி அடைய மாட்டார்களாம். ஸ்ரீவைகுண்டத்திலேயே இந்த கதி என்றால் பூலோக வைகுண்டத்தில் நிச்சயம் அது நடைமுறைக்கு வரவேண்டுமே என்று நினைத்தவர் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அரஙகனின் அருளப்பாடு வந்தது. 'கலியன்! என்ன வேண்டும் உமக்கு?' சரியான சமயம். கலியன் விடுவாரா? 'நாயன் தே! வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல் திராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் தேவிமார் பரிஜனங்கள் உடனே திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.' என்றார். வானிளவரசு வைகுந்தக் குட்டன் வரந்தரும் பெருமாள் ஆனார். பின்னர் காலம் இருட்டாகித் திருவாய்மொழி மறைந்து, நாதமுனிகள் 'ஆராவமுதே' பத்துப்பாட்டின் பின் தொடர்ந்து சென்று, திருவாய்மொழி, திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்கள் அனைவரது பாடல்களையும் மீட்டது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வரலாறு.

நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி, பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாகத் தேவ கானம் என்ற புதிய இசை முறையில் ஆழ்வார் பாடல்களை இசையமைத்து உரியவரைப் பயிற்றிப் பெரும் ஓலக்கமாகச் செய்து திருவிழாவாக ஆக்கிவிட்டார். திருவாய்மொழிக்குத் திருநாள் கண்ட கலியனின் திருமொழிகளையும், மற்றுமுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருவாய்மொழி பத்துநாளுக்கு முந்தைய பத்துநாளும் பகலில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து, திருமொழித் திருவாய்மொழித் திருநாளாக வளர்த்தெடுத்தவர் எம்பெருமானார் என்று பன்னிருதிங்கள் அநுபவம் என்ற நூலில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் கூறுகிறார்.

மங்கை மன்னன் வேற் கலியன் மான வேல் பரகாலன் காலத்திலேயே வேரூன்றி நாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும் கனியும் தட நிழலுமாய் விரிந்து எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய் விச்வரூபம் எடுத்ததுதான் சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித் திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே.!

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமா நுசன்.
(பராசர பட்டர்)

***

No comments:

Post a Comment