Monday, December 30, 2019

லோபத்தில் எத்தனை வகை?

லோபத்தில்தான் எத்தனை வகை? லோபம் என்றால் ஆசைமட்டுமன்று. ஆசைப்பட்டதை ஆர்வமாகக் கைப்பற்றிக்கொண்டு ஒரு நாளும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடமாக உரிமையாக்கிப் பேணிக்கொள்ளும் உடும்புப்பிடியான பற்று இருக்கிறதே அந்த மனப்பான்மைக்குத்தான் உண்மையில் லோபம் என்று பெயர். ஆங்கிலத்தில் chronic possessive. இந்த லோபம் என்பது ஆன்மிக சாதனையில் ஒருவருக்கு எதிர்ப்படும் மன ரீதியான ஆறு விரோதிகளில் ஒன்று. காமம், குரோதம், லோபம், மதம், மாஸ்சர்யம், மோகம் என்று ஆறு. இந்த ஆறும் நன்கு பாடமாகியிருக்கிறது. ஞாபகப்படுத்த வேண்டிய தேவையே இல்லை. ஆனால் இதைப் போன்று சத் விஷயங்கள் உடனே நினைவுக்கு வராதோ? போகட்டும்.

இந்த லோபம் இருக்கிறதே, அதாவது பொருளாசை, பொருளை அடைந்து அதில் விடாப்பிடியான பற்றுதல் என்பது, இந்த லோபம் முழுமையாக உடையவன் ஸம்ஸாரி. சார்! அவர்கிட்ட ஒரு பைசா போனாலும் வெளியில வராது சார். அவர்கிட்ட போயிடுத்தா போச்சு, அவ்வளவுதான் முதலை வாயில் போனால் போல்தான். -- இது போல் ஏற்படும் சொலவுகள் எல்லாம் இந்த லோபத்தைக் குறித்து எழுகின்றன. இந்த அளவுகோலின்படி பார்த்தால் நாம் எத்தனை பேர் உண்மையான ஸம்ஸாரிகள்? அதிலும் நாம் முதலிடம் வகிப்போமா என்பது சந்தேகம் தான். நாமெல்லாம் பர்ஸெண்டேஜ் ஸம்ஸாரிகள்தாம். முதல் பரிசு பலருக்குக் கிடைக்காது.

ஆனால் இதே லோபமானது அறிவு விஷயத்தில் இருந்தால் அதுவே எவ்வளவு சிறப்பு! ஒரு சத் விஷயத்தைக் கேள்விப் படுகிறோம். உடனே லபக் என்று அதைக் கைக்கொண்டு நினைவில் வைத்துப் பூட்டி ஒரு நாளும் அதை இழக்க மாட்டேன் என்று அடமாகப் பேணும் அந்த அறிவுத்தனமான லோபம்,....அடடா! அது இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! ஆனால் அறிவு போன்ற உயர்ந்த விஷயங்களில் கொள்ளும் லோபத்தை (ஒரு வேளை யாராவது கொண்டால்) லோபம் என்று சொல்வதில்லை. ஏனெனில் அப்பொழுது உயர்ந்த குணமாகவும், ஆன்மிக வழிக்கு அனுகூலமாகவும் ஆகிவிடுகிறது. அறிவு விஷயத்தில் அப்படி லோபம் கொண்டு கற்பதுதான் உண்மையான மாணவத் தன்மை என்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட லோபம் இல்லாமல் கற்பவர்கள் கடையர்கள்தாமாம்!

உடையார் முன் இல்லார் போல்
ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களோ என்னில் எவ்வளவு லோபங்களைப் பட்டியலிடுகின்றனர்! ஸம்ஸாரி என்பவன் அர்த்த லுப்தன். பொருள் பற்று கொண்டவன்.

ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் ஜ்ஞான லுப்தன் ஆம். தன்னுடைய ஆத்மாவின் நிலைநின்ற தன்மை யாது என்ற ஆத்ம ஜ்ஞானம், பகவானின் ஸ்வரூபம் என்ன என்பதைப் பற்றிய ஜ்ஞானம் ஆகிய இந்த ஜ்ஞானங்களைப் பொறுத்த மட்டில் எந்த அர்த்தங்களும் சிந்தாமல் கொண்டு உள்ளே மறப்பொன்று இன்றிப் பேணுபவன். 'அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்' என்பது அன்றோ ஆழ்வார் வாக்கு! 'ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை யான்' அன்றோ!

அடுத்து முக்தர்களாக நித்ய விபூதியை அடைந்தவர்கள், அங்கேயே என்றும் இருக்கும் நித்ய முக்தர்கள் ஆகிய இவர்கள் கைங்கர்ய லுப்தர்களாம்! பகவானுக்கு அனைத்து தொண்டுகளும் சிறிதும் பிசகின்றி, தவறாமல், அயர்வு, மயர்வு ஏதுமில்லாமல், அனைத்துத் தொண்டுகளும் நானே ஆற்ற மாட்டேனா என்ற பேரார்வத்துடன் கைங்கர்யம் செய்பவர்கள். யாருக்கும் அதில் பங்கு கேட்டால் விட்டுக் கொடுக்காத அளவுக்கு possessive.

சரி. இவர்கள்தாம் இப்படி என்றால் பகவான் எப்படி? அவனும் ஒரு லுப்தன் தானாம்! பகவான் தாஸ்ய லுப்தனாம்! இந்த ஜீவன் தன் இயல்பின் படி யாருக்கு தாஸ்யம் பூணுவது என்றால் அவன் ஒருவனுக்கே அன்றி பிறர் திறத்ததல்லா என் அடிமை என்ற படி தாஸ்யம் என்ற மொத்தத்தையும் தன் ஒருவனுக்கே கொள்ளும் அளவிற்கு தாஸ்ய லுப்தனாம் பகவான். அதாவது அவனைத் தவிர வேறு யாரும் ஜீவனின் தாஸ்யத்திற்கு அருஹர் அல்லர் என்றபடி.

எந்தக் காலத்திலோ ஆசார்யர்கள் சொன்ன அருமையான ரத்தினச் சுருக்கமான வார்த்தையை வார்த்தாமாலை ஏடுபடுத்தி வைத்திருக்கிறது.

"அர்த்தலுப்தன் ஸம்ஸாரி; ஜ்நாநலுப்தன் ஸ்ரீவைஷ்ணவன்; கைங்கர்ய லுப்தர் முக்தநித்யர்; தாஸ்ய லுப்தன் எம்பெருமான்."

***

No comments:

Post a Comment