Friday, December 27, 2019

பிரபத்தி சுலபமா?

யோகம், ஜப தபம், தவம் எல்லாம் ஒருவர் எவ்வளவு முயன்றாலும் உண்மையில் மிகவும் கஷ்டமானவை சார். மனத்தை ஒரு நிமிடம் சஞ்சலம் இல்லாமல் நிறுத்துவதே பெரும்பாடாய் இருக்கிறது. இதில் பக்தி என்று சொன்னாலும் நாம் எவ்வளவு தூரம் மனம் தோய்ந்து ஈடுபட முடியும்? -- இவ்வாறு ஒருவர் வெளிப்படையாகச் சொல்பவரை நாம் என்ன செய்ய முடியும்? அவர் சொல்வது நியாயம்தானே! இல்லை என்று மறுக்கவா முடியும்? ஸ்ரீமத் பகவத் கீதை கேட்ட அர்ஜுனனே இவ்வாறுதானே பகவானிடமே சொன்னான்.

"கிருஷ்ணா! நீ சொல்வதுபோல் ஸமத்வம் யோக உச்யதே என்று சொன்னால், மனத்தைச் சம நிலை பிறழாமல் வைப்பது என்பது மிகவும் கஷ்டமாயிற்றே! எனக்கு முடியும் என்று நம்பிக்கை இல்லையே! காற்றடிக்கும் பொழுது தீபம் ஆடாமல் இருக்க வேண்டும் என்பது போலல்லவா இருக்கிறது! புலனுணர்ச்சிகள் என்னும் விடாத பெருங்காற்றில் எப்படி முடியும் இது?"

"அர்ஜுனா! விடாமுயற்சியினாலும், பொறுமையினாலும், அப்யாஸத்தினாலும் யோகம் கைவரப் பெறும் என்பதை அறிவாயாக. ஆனால் கஷ்டமானதுதான் என்றாலும் அசாத்யமானது அன்று" என்று கூறுகிறான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே நம் போல்வார் மலைப்பதில் என்ன தவறு இருக்கிறது? நியாயம்தான். நமக்கெல்லாம் ஏற்ற வழி பிரபத்தி, சரணாகதி ஒன்றுதான். எல்லாம் அவன் கையில் விட்டுவிட்டு, அவன் அருளே வாழ்வு நமக்கு என்று இருத்தல், அதுதான் நம் போல்வாருக்கு. எந்த வழிக்கும் லாயக்கில்லாத நம் போன்ற அசக்தர்களுக்குச் சரணாகதியை விட்டால் என்ன கதி?

ஆழ்வார்களும், ஆசார்யர்களும், பெரும் மஹான்களும் சரணாகதியே கதியென்று இருந்தார்களே! அவர்களும் அசக்தர்களா? நமக்குக் கடவுளிடம் மனத்தை வைத்தல் கஷ்டமான வேலை என்றால், அவர்களுக்கோ கடவுளிடமிருந்து மனத்தை மீட்டல் மிகவும் சிரமமான காரியம்.

திருவிருத்தம் 38

'கடமாயினகள் கழித்துத் தன் கால்வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர்நிலைநின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.--

என்ற பாட்டில் ஒரு குறிப்பு காட்டுகிறார்கள். குருகைக் காவலப்பனை மற்றவர்கள் 'எம்பெருமானை நினைப்பதற்கு எங்களுக்கு ஒரு விரகு சொல்லுங்கள்' என்று கேட்க,
குருகைக் காவலப்பன், ‘எம்பெருமானை மறப்பதற்கு எனக்கு நீங்கள் ஒரு விரகு சொல்ல மாட்டீர்களோ?' என்றாராம்.- (விரகு - உபாயம்)

- "ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன் அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கில்லையிறே. விசேஷணாம்சம் தோற்றாநிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே".

அதாவது ஒரு பொருளானது பெயர் வடிவம் ஆகியவற்றோடு கூடியிருக்கிறது என்ற காரணம் பற்றியே ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது உள்ளே அந்தர்யாமியாய் நாராயணன் நிற்கின்றான் என்று. ஏனெனில் அவன் உள் நின்றால் அல்லது ஒரு பொருளுக்கு இருப்புடைமை என்ற 'ஸத்தை'யே கூடாது. ஆக ஒரு பொருளைப் பார்த்தாலே நமக்கு என்ன நினைவு எழ வேண்டும்? ஆஹா! ஒரு பொருள் பொருளாக இருக்கிறதே! அப்பொழுது அவன் உள் நிற்கிறான் என்றல்லவா அர்த்தம்! என்று எந்தப் பொருளைப் பார்த்தாலும் அவன் நினைவு எழும்படியாகத்தான் ச்ருஷ்டியே அமைந்திருக்கிறது. நீங்கள் என்னடா என்றால் அவனை ஞாபகப் படுத்திக் கொள்வதற்கு ஓர் உபாயம் சொல் என்கிறீர்களே! சரியாகச் சொன்னால் மறப்பதற்கன்றோ உபாயம் தேட வேண்டியிருக்கிறது. -- இது குருகைக்காவலப்பனின் ஹ்ருதயம்.

எம்பார் கூறுகிறார் ---

"நம்மை லோக யாத்திரையினின்றும் வேத யாத்திரையிலே மூட்டுந்தனை அருமை போரும் ஆழ்வார்களை வேத யாத்திரையிலே நின்றும் லோக யாத்ரையிலே மூட்டுகை".

It is as difficult to divert the Alwars from the Vedic realisation to worldly involvements, as it is to divert us from worldly involvements to the Vedic realisation.

அப்படி இருக்க ஆழ்வாராதிகளும் ஏன் சரணாகதியே கதி என்று இருந்தார்கள்? காரணம் என்னவென்றால் ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு உணர்ந்தால் அதன் இயல்புக்குப் பொருந்தின மார்க்கமே பிரபத்தியாகிய சரணாகதிதான்.
ஸ்வரூபத்தை நன்கு உணர்ந்து ஆத்ம ஜ்ஞானம் செவ்வனே வாய்க்கப் பெற்றவர்கள் ஆகையாலே அவர்கள் ஸ்வரூபத்துக்கு ஏற்ற ஹிதம் ஆகிய உபாயமாகச் சரணாகதியைக் கைக்கொண்டார்கள். நாம் கைக்கொள்வதற்குக் காரணம் அசக்தி. அவர்கள் கைக்கொள்ளக் காரணம் ஸ்வரூப ஜ்நாநம். எப்படியோ சுலபமான வழியொன்று கிடைத்ததே, அதுவே போதும் என்று நினைக்கிறோம். உண்மையில் சுலபமா பிரபத்தி என்பது?

என்னை நான் காப்பதற்கு ஆள் இல்லை. எனக்கு என்று எதுவும் இல்லை. எல்லாம் உன் உடைமை. எல்லாம் உன் பாரம். நான் என்னைப் பற்றிக் கவலைப்பட உரியவன் இல்லை. என்னைப் பற்றிய பொறுப்பு எனக்குக் கிடையாது. உனக்கே அனைத்தும் பொறுப்பு. -- இவ்வாறு ஒருவர் மஹாவிச்வாஸத்துடன் முடிவாகத் திண்ணத்துடன் ஒப்படைத்துவிடுதல் என்பதுதான் பிரபத்தி.

நினைத்துப் பாருங்கள். இவ்வாறு சொன்ன பிறகு, அடுத்த வினாடி நம் வாழ்க்கையைப் பற்றி நாம் ஒரு சிந்தனையும் பட முடியாது. ஒரு கவலையும் பட முடியாது. ஒரு துரும்பு நறுக்கக் கூட நமக்கு உரிமை இல்லை. ‘நான் அதைக் கோவிலில் தானே சொன்னேன். வெளி உலகத்துல பல விஷயங்களில் நான் தானே எல்லாத்தையும் பார்த்துப் பண்ணியாகணும். அதாவது என்னால முடிந்தமட்டும் செய்யறேன். முடியாத பக்ஷத்துல அவன் பார்த்துக்கட்டும்னு சொன்னேன். அதுக்குன்னு ஒன்றுமே பண்ணாம சோம்பேறியா இருக்க முடியுமா? ஒன்றும் பண்ணாம இருந்தா என் அன்றாட வாழ்க்கையின் யோக க்ஷேமத்தை யார் கவனிக்கிறது?’ -- இந்த நிலைக்குத்தான் நாம் வந்து சேருவோம். எதிலும் சௌகரியமான சாய்மானம் அதுதான் நமக்குத் தெரிந்த ஆன்மிகம், பக்தி நம்பிக்கை, சரணாகதி. ஆனால் பணம் கிடைக்கும், இனபம் வேண்டும், கிரிக்கட் மேட்ச் பார்க்க டிக்கட் வாங்கணும், வெளிநாடு போவதற்கு விசா வாங்கணும் என்றால் இராப்பகலாகத் தவம் கிடப்போம். உலக ரீதியாக நமக்கு முக்கியம் என்ற நோக்கத்திற்கு உழைப்பது நமக்கு மிகவும் அர்த்தம் உடையது. ஏதோ ஆச்வாசமாக வாழ்க்கையில் அவ்வப்பொழுது கடவுள், பரம்பொருள், மறுஜன்மம் என்றெல்லாம் நினைவு எழும்பொழுது அந்த பக்தி, ஜப தபம், எல்லாம் யாரால பண்ண முடியும்? அப்பா! சரணாகதி பண்ணிட்டா எல்லாம் அவன் பார்த்துப்பான்.

உலகியல் கணக்குகள் என்று நமக்கு முடிவடைகின்றனவோ அன்றுதான் நம் ஆன்மிக ஜனனம் ஆரம்பம்.

***

No comments:

Post a Comment