Monday, December 30, 2019

பட்டினிப் பெருமாள்

’படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனோ!’
-- என்கிறார் ஆழ்வார். அது என்ன படியாய்க் கிடத்தல்? அவனுக்கே தொண்டு பூண்ட தன்மையது இந்த ஆத்மா என்ற சேஷத்வமும், அவன் இட்ட வழக்காய் இருத்தல் என்ற ஸ்வரூப ஞான முதிர்ச்சியான பாரதந்த்ர்யமும் துலங்கும் மனநிலை. படியாய்க் கிடந்தால் கிடக்க வேண்டியதுதானே? ஏன் அவன் பவளவாயைக் காண்பேனே என்ற மனோரதம்? சித் வஸ்து ஆயிற்றே ஜீவன்! சைதன்யம் உடையவன் என்பதற்குப் பொருள் ஏற்பட வேண்டாமோ!

எம்பெருமானார் காலத்தில்தான் எத்தனை விதமான ஆன்மிக மனோபாவங்கள் துலங்கப் பெரியோர்கள் இருந்துள்ளனர்! பட்டினிப் பெருமாள் என்று ஒருவர். பெரிய பெருமாளின் திருமுடிக்குறையிலே, அதாவது குடதிசை முடியை வைத்து என்பதற்கேற்ப மேற்கு பார்ச்வத்திலே (மேலை வீதிகளில் ஒன்றாக இருக்கும்) கல் போல் கிடப்பர் இந்தப் பட்டினிப் பெருமாள். பேச்சு, அசைவு எதுவும் கிடையாது. தூண், மரம் எல்லாவற்றோடும் அதுவும் ஒன்று என்ற கணக்கில் யாரும் அவரை ஓராள் என்று பார்ப்பது கிடையாது. சில நாட்களுக்கு ஒரு முறை அவரைப் பார்த்து எம்பெருமானார் "பெருமாளே!" என்று விசாரித்து விட்டுச் சென்றால் அவ்வளவுதான் மரம் போல் கிடக்கும் அந்த மனிதரிடத்துச் சலனம் உண்டாகும். பதிலுக்குத் தானும் "ஜீய! ஜீய!" என்று சொல்வார். எம்பெருமானார்க்குப் பரம சந்தோஷம். இன்றைக்குக் கிருதார்த்தர் ஆனோம் என்று சொல்லிக் கொண்டு, பட்டினிப் பெருமாளோ அவ்வளவுதான், நாலு நாள் தொடர்ந்து அந்த நினைவிலேயே மூழ்கி இருப்பர், ’எம்பெருமானாரின் கடாக்ஷத்திற்கு இலக்காக ஆனோமே!' என்று.

ஒரு நாள் சில திருடர்கள் பொருள்களைக் களவு கண்டு போகும் பொழுது அவர்களில் ஒருவன் இந்தப் பட்டினிப் பெருமாளைக் கண்டுவிட்டான். என்ன இது ஒரு மனிதன் இங்கு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறானே என்று கூட்டாளிகளுக்குச் சொல்ல, அவர்கள் "உனக்குத் தெரியாதா? அவன் இந்த மரம், கல் போன்று நெடுநாள் இப்படியே இங்கேயே உட்கார்ந்திருப்பவன். அவனை யாரும் ஒரு மனிதனாகக் கணக்கிடுவது கிடையாது. இந்த மரம் கல் யாருக்காவது நம்மைப் பற்றி உரைக்கக் கூடுமென்றால் அன்றோ இவனும் நம்மைப் பற்றி உரைப்பது. கவலையை விடு. வா வா சீக்கிரம்" என்றனர்.

இந்த உரையாடலை அந்தப் பக்கம் வந்த எம்பெருமானார் கேட்க நேர்ந்தது. அவர் இந்தச் சம்பவம் பற்றிப் பல நாள் பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

படியாய்க் கிடந்து
நின் பவளவாய்க் காண்பேனோ!

*
பெருமாளே!
ஜீய ஜீய

***

No comments:

Post a Comment